நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் நடைப்பெற்ற விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணபலன்களை வழங்கினர்.
போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இவ்விழாவில் பேசும் பொழுது போக்குவரத்து கழகம் என்றாலே மக்கள் சேவை செய்யும் துறை. ஓரு நாளைக்கு 1.75 கோடி மக்களை ஏற்றி இறக்கி வரும் துறை. சேவை துறை என்பதால் வரவுக்கும் செலவிற்கும் இடைவெளி அதிகமாக இருக்கின்றது.
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான, பணபலன்கள் இந்த ஆட்சியில் வழங்கப்படுகின்றது. தனியார் போக்குவரத்து முதலாளிகளுக்கு இணையாக அரசு போக்குவரத்து சேவையும் இருந்து வருகின்றது.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்: புதிய மொட்டார் வாகன சட்டம் மக்களை பாதிக்காத வகையில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அபராதங்கள் குறைக்கப்பட்டு விரைவில் அமல்படுத்தபடும்.
தீபாவளி பண்டிகையின் போது கூடுதலாக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில், கோவை மண்டலத்திற்கு உட்பட்ட ஓய்வுபெற்ற 793 பணியாளர்களுக்கு ரூபாய் 164.79 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.