பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை உறுதி செய்தது இலங்கை கிரிக்கெட் அணி. பாகிஸ்தானுக்கு செல்லும் சுற்றுப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இலங்கை அணியைச் சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சிலர் இந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இதனால் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சென்று விளையாடுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்தத் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இலங்கை தரப்பிலிருந்து உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி வீரர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பாகிஸ்தான் தரப்பிலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது இலங்கை அணி நிர்வாகம்! இதை அடுத்து பாகிஸ்தான் அளித்த உறுதிமொழியின் பேரிலேயே பாகிஸ்தானுக்குச் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் – இலங்கை தொடர் உறுதி செய்யப்பட்டுள்ள போதும், அணியின் முன்னணி வீரர்களான மலிங்கா, மாத்யூஸ், திசரா பெரேரா உள்ளிட்ட வீரர்கள், ஏற்கெனவே கூறியிருந்தது போல, பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
முன்னதாக, பாகிஸ்தானில் சென்று விளையாடவுள்ள தொடரை இலங்கை கிரிக்கெட் அணியின் சில முன்னணி வீரர்கள் தவிர்த்ததன் பின்னணியில் இந்தியாவின் தலையீடு இருந்ததாக செய்தி வெளியானது . அதை இலங்கை அரசு மறுத்தது.
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த தகவலில், பாகிஸ்தான் செல்ல இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு தெரிவித்ததற்கு இந்தியாவின் தலையீடு உள்ளதாக வெளியாகியுள்ள தகவலில் உண்மை இல்லை.
2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியை இலக்கு வைத்து பாகிஸ்தானில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இந்த தீர்மானத்தை எட்டியது என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
கிரிக்கெட் வீரர்களின் இந்தத் தீர்மானத்தை தாம் மதிப்பதாக கூறியுள்ள அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பும் வீரர்களை தேர்வு செய்து அனுப்பும் பணியில் ஈடுபடவுள்ளதாகவும், இலங்கையிடம் பலம் பொருந்திய அணி ஒன்று உள்ளதாகவும், பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் மண்ணில் வைத்து வீழ்த்தும் என்றும் ஹரின் பெர்ணான்டோ நம்பிக்கை தெரிவித்திருந்தார்.