வெற்றிடத்தை நிரப்ப எடப்பாடியார் வந்துவிட்டார் என்று அதிமுக.,வில் குரல்களை எழுப்பி வந்த நிலையில், தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று கூறி… கோடிட்ட இடத்தை நிரப்பச் சொல்லியிருந்த ரஜினி காந்த் கருத்துக்கு அதிமுக அமைச்சர்கள் அடுத்தடுத்து பதில் கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறாக, தற்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இடத்தை ரஜினிகாந்த் பிடித்துவிட்டார் என்று கருதலாம். பஞ்சமியில் பஞ்சராகிப் போயிருக்கும் ஸ்டாலினுக்கு நெஞ்சைத் தடவி ஆறுதல் சொல்லும் விதமாக கள்ள உறவுக்குக் கைநீட்டியிருக்கும் முதல்வர் எடப்பாடியாரால் அரசுத் தரப்பில் மெத்தன நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. எனவே திராவிட இயக்கங்கள் வழக்கம் போல் கூட்டணி வைத்து கோலோச்சத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், ஆன்மிக அரசியலை மேற்கொள்வேன் என்று கூறி ரஜினி காட்டிய ஆரம்ப வேகம் இப்போது இல்லை ஆயினும் அவ்வப்போது எட்டிப் பார்த்து எதையாவது சொல்லிவிட்டுப் போக, அதனைப் பிடித்துக் கொண்டு விமர்சனப் பாதையில் வீறு நடை போடுகிறார்கள் தமிழக அமைச்சர்கள்.
அந்த வகையில் இப்போது ஸ்டாலினின் இடத்தை ரஜினி பிடித்துவிட்டார்! அதிமுக.,வினருக்கு சிறிது காலம் கமல் கசந்து கொண்டிருந்தார். இப்போது ரஜினி கைகோத்துவிட்டதால், கசப்பு மேலும் கசப்பாகிவிட்டது.
இந்த நிலையில், அமைச்சர்கள் சிலர், ரஜினியின் ’வெற்றிடக்’ கருத்துக்கு எப்படி கோடிட்ட இடத்தை நிரப்பியிருக்கிறார்கள்.. பார்க்கலாம்!
அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டவர்கள் மிகக் கடுமையாக ரஜினி மற்றும் கமல் குறித்து கருத்துக்களை கூறி வருகின்றனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா இடத்தை யாராலும் நெருங்க முடியாது, ரஜினி, கமல், விஜய் இணைந்து வந்தாலும் அதிமுக என்ற சிங்கம் சிங்கிளாக சந்திக்கும் :- அமைச்சர் ஜெயக்குமார்!
முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான் கிடைக்கும்: – அமைச்சர் உதயகுமார்!
சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடித்தவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாது :- அமைச்சர் ஓ.எஸ்.மணியன்!
யார் இணைந்தாலும் கவலையில்லை! அதிமுக அடித்தளம் வலுவாக உள்ளது :- துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்!