மலேசியாவில் ஹிந்து உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் மீறி, திமுக., சார்பு மலேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகளின் ஆசியுடன் வைரமுத்துவின் நிகழ்ச்சி இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரங்கில் நடைபெற்றது.
மலேசிய நாட்டில் 30 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். மலேசியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், அங்கே நாத்திக எண்ணங்களுக்கு இடமில்லை. மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள், சீனர்கள், ஹிந்தி பேசும் இந்தியர்கள், சீக்கியர்கள் என அனைவருக்கும் அவரவர் மத விழாக்களை பிறருக்கு இடையூறு இன்றி நடத்திக் கொள்ள மலேசிய அரசு அனுமதிக்கிறது.
மலேசியாவில் வாழும் இந்துக்களின் பாரம்பரியம் தொடர்ந்து நடைபெற, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆன்மிக உணர்வுள்ள இந்துக்கள் இணைந்து ‘இந்து தர்ம பெருமன்றம்’ என்ற அமைப்பு தொடங்கி, அர்ச்சகர் பயிற்சி, ஜோதிடம் , இந்து மத பிரசங்கம் போன்றவற்றை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்திய வம்சாவளி இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் திமுக.,வின் நாத்திக கொள்கைகளில் ஈடுபட்டு, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, சிவாஜி கால சினிமாக்களை ரசித்து, அதுதான் தமிழ் என்ற உணர்வுக்கு கொண்டு வரப் பட்டுள்ளனர். இவர்களின் ஆதிக்கத்தில் மலேசிய இந்தியன் காங்கிரஸ் இருப்பதால், நாத்திகவாதிகளின் தொடர்புக்கு இவர்கள் ஆட்படுகிறார்கள்.
மலேசிய இந்தியன் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள், தமிழ் அறிஞர்களின் பெயர்களில் இயங்குபவர்கள், தமிழகத்துக்கு வரும் போது, அவர்களை முன்னிறுத்தி நிகழ்ச்சிகளை நடத்துவது, பொன்னாடை போர்த்துவது, அந்தப் புகைப்படங்களை பத்திரிகைகளில் பிரசுரிக்க வைப்பது என்று இயங்கி வரும் வைரமுத்து போன்றவர்களால், நாத்திகவாதிகளின் வலையில் மலேசிய இந்தியன் காங்கிரஸ் முக்கியப் பிரமுகர்கள் விழுந்து விடுகிறார்கள் என்கிறார்கள் மலேசிய வாழ் இந்து உணர்வாளர்கள்.
இதனால்தான், தமிழகத்தில் ஆன்மிக இந்து உணர்வாளர்களின் மன உணர்வுகளை மிதித்து குழிதோண்டிப் புதைத்து, குரூர எண்ணத்துடன் சுற்றித் திரியும் வைரமுத்து போன்ற கவிஞர்களுக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று எவ்வளவோ கெஞ்சியும், தங்கள் மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்து விட்டார்கள் மலேசிய இந்தியன் காங்கிரஸ் நிர்வாகிகள் என்று மனம் பொருமுகின்றனர் மலேசிய வாழ் இந்துக்கள்.
இன்று பல்வேறு எதிர்ப்புகளையும் கடந்து கவிஞர் வைரமுத்து தனது ‘ தமிழாற்றுப்படை’ நூலை மலேசிய தலைநகரில் உள்ள மலேசிய காங்கிரஸ் அரங்கில் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். முன்னதாக, மலேசியா பாராளுமன்ற சபாநாயகர் விக்னேஷ்வரன், யோகேஸ்வரன் உள்ளிட்ட மலேசியா வாழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வைரமுத்துவின் ‘ தமிழாற்றுப்படை’ நூலை மலேசிய காங்கிரசின் ‘ நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்’ அரங்கில் வெளியிட ஏற்பாடு செய்து இருந்தனர்.
முன்னர் தி.க., தலைவர் கி.வீரமணியின் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தடை பெற்றது போன்று, வைரமுத்துவின் நிகழ்ச்சிக்கும் தடை பெற்று விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர் மலேசிய இந்து உணர்வாளர்கள். இதனால் ‘தமிழக இந்துக்கள் போல அல்லாமல், மலேசிய தமிழ் இந்துக்கள் சோற்றில் உப்புப் போட்டு உண்டு சொரணை மிக்கவர்களாக, உணர்ச்சியுடன் உள்ளார்கள் என்று தமிழக இந்துக்கள் சமூகத் தளங்களில் எழுதி பெருமைப் பட்டனர்.
ஆனால் அதற்கு வாய்ப்பு வைக்காமல், நாத்திகவாதிகளான மலேசியன் இந்தியன் காங்கிரஸ் நிர்வாகிகளில் சிலர், இன்று காலை திட்டமிட்டபடி விழாவை நடத்தினர்.