நாகர்கோவில் மங்களூர் இடையே தினசரி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவிலில் இருந்து தினசரி காலை 5 மணி அளவில் புறப்படும் இந்த ரயில் இரவு 9 மணி அளவில் மங்களூரை அடையும். நேற்று காலை மங்களூருக்கு புறப்பட்டு சென்றது.
மாலை 4.30 மணி அளவில் கோழிக்கோடு அருகே வடகரை-ஐயனிக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பயங்கர சத்தம் கேட்டது. ரயில் நன்றாக குலுங்கவும் செய்தது. இதை கவனித்த இன்ஜின் டிரைவர் அடுத்த ஸ்டேஷன் வந்ததும் அதிகாரிகளிடம் விவரத்தை கூறினார்.
தொடர்ந்து அந்த ரயில் மங்களூர் புறப்பட்டு சென்றது. பின்னர் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் தண்டவாளங்களை இணைக்கும் 20க்கும் மேற்பட்ட கிளிப்புகள் அகற்றப்பட்டிருந்தது.
இது தவிர தண்டவாளத்தில் பல இடங்களில் கற்களும் அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
பரசுராம் எக்ஸ்பிரசை கவிழ்ப்பதற்காக யாராவது இந்த சதி செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து கோழிக்கோடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. பல இடங்களில் ரயில் மறியல், தண்டவாளங்களை சேதப்படுத்தும் சம்பவமும் நடந்துள்ளன.
இந்த நிலையில் கோழிக் கோட்டில் தண்டவாளத்தில் கிளிப்புகள் அகற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.