திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தீராம்பட்டியில் வசித்து வருபவர் தோல் வியாபாரி சுப்பிரமணி. இவர் இந்தப் பகுதியில் தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது மனைவி சுப்புலெட்சுமி சனிக்கிழமை விடியற்காலை வீட்டு வாசலில் கோலமிட்டுக்கொண்டிருந்த போது, அருகில் மறைந்திருந்த இரு இளைஞர்கள் சுப்புலெட்சுமியை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுத்தங்களைக் கொண்டு சராமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் தலை, முகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் வெட்டுக் காயத்துடன் சுப்புலெட்சுமி இரத்த வெள்ளத்தில் வீட்டின் வாசலிலேயே கிடந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த பால்காரர் அளித்த தகவலின் பேரில் வெளியே வந்த சுப்பிரமணி மற்றும் குடும்பத்தினர்கள், சுப்புலெட்சுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த மணப்பாறை காவல் ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையிலான காவலர்கள், அரிவாள் வெட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.