இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக் கட்ட போரில் 1 1/2 லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் கொன்று அழிக்கப்பட்டனர். அப்பொழுது அதிபராக இருந்த ராஜபக்சே மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளார். இந்த கொடுமையான இனஅழிப்பை ஒட்டி சர்வதேச நம்பகமான சுதந்திரமான புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகத்தின் பல நாடுகளில் இருந்து ஈழத்தமிழர்பால் மீது அக்கறையுடன் அவ்வப்போது தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம்.
அதுமட்டுமின்றி ஈழத்தமிழர்கள் தங்கள் வாழ்வை தாங்கள் விருப்பத்திற்கேற்ப அரசியல் சுயநிர்ணயம் செய்துக் கொள்ளும் பொருட்டு பொதுவாக்கெடுப்பு சர்வதேச கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும்.
இதனை தமிழகம் மற்றும் ஈழத் தமிழர்கள் மீது அக்கறை கொண்ட அனைவரும் அறிவர். ஐநா மனித உரிமை ஆணையத்தில் நான அளித்த அறிக்கை ஐநா மன்றத்தின் ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகளாக விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி வருகின்றோம். எல்.எல்.ஆர்.சியின் பரிந்துரையும் ஏற்று, 13வது சட்டத் திருத்த உரிமையும் வழங்கப்படும் என ராஜபக்சே அளித்த வாக்குறுதி இதுவரை காப்பாற்ற படாமல் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
ஈழத்தில் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என அழுத்தமாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் வலியுறுத்திய போதிலும் ஐநா மன்றம் பரிந்துரையை ராஜபக்சே அரசு அதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. ராஜபக்சே, மைத்ரி சிரிசேனா, ரணில் விக்ரமசிங்கே ஆகியோரின் ஆட்சி காலத்தில் இந்த சுதந்திரமான விசாரணையும் , பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் , இறுதிக்கட்ட போரின் போது கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் மற்றும் போரின் போது காணாமல் போன தமிழர்களை கண்டுபிடிக்க வலியுறுத்தியும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக எவ்விதமான நடவடிக்கையும் இலங்கை அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை.
பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெற இருக்கும் ஐநா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் இது குறித்த பிரச்சனைகள், எழுப்பப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றை திரும்பப் பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள ராஜபக்சே முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த தீர்மானங்களை மனித உரிமை ஆணையம் எந்த சூழ்நிலையிலும் திரும்பப் பெறாமல் சர்வதேச சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு பன்னாட்டு கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட வேண்டும். இந்திய அரசும் இந்த விஷயத்தில் தலையிட்டு முனைப்புக் காட்டி ஐநா மனித உரிமை ஆணையத்தில் இதனை வலியுறுத்த வேண்டும்.
சரி.. இனி செய்தி என்ன என்று பார்ப்போம்…
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் இதற்கான முடிவை எட்டியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சே இன்று (கடந்த புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்தார். இலங்கை ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா செல்ல பயணத்தடை விதிக்கப்பட்ட சம்பவத்தை கருத்தில் கொண்டே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்து அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க பயணத்தடை விதித்திருந்தது.
இந்த நிலையிலேயே இலங்கை அரசாங்கம் இன்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு அப்போதைய இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியமை மிகப் பெரிய காட்டிக் கொடுப்பு என பிரதமர் மஹிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கை படையினர் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் 2015ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவை வழங்கியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு அப்பாற் சென்று 2011ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே 2015ஆம் ஆண்டு பிரேரணை தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார். யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் இலங்கை பாதுகாப்பு தரப்பனருக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன உள்ளடங்கிய நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்த தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விசயங்களை கருத்திற் கொண்டே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.
- கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (செய்தி தொடர்பாளர், திமுக.,)