144 தடையை மீறி வெள்ளிக்கிழமைக்கு பள்ளிவாசலில் நூற்றுக்கணக்கில் திரண்டவர்கள் குறித்து அறிந்து, தென்காசி போலீஸார் அதனைத் தடுத்துள்ளனர். பின்னர் வேறு வழியின்றி அவர்களை கலைந்து போகச் செய்ய தடியடி நடத்தினர். பதிலுக்கு போலீஸார் மீது கல்வீச்சும் செருப்பு வீச்சும் நடத்தப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டம் கூடுவதால் சமூக தொற்று பரவும் அபாயம் இருந்ததால் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன.
மசூதிகளில் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டது. இஸ்லாமிய மத தலைவர்களும் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே தொழுகை நடத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இன்று தென்காசி நடுப்பேட்டை பள்ளிவாசலில் ஊடங்கு உத்தரவை மீறி நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். இதை அடுத்து, தென்காசி டிஎஸ்பி கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அந்த இடத்துக்குச் சென்றனர்.
ஐமாத் நிர்வாகிகளிடம் பேசி, அனைவரையும் வெளியே வருமாறு போலீசார் கூறினர். இதை ஏற்காமல் வாக்குவாதம் செய்து, நாற்காலிகள் உள்ளிட்டவைகளை அவர்கள் போலீஸார் மீது வீசியதாகக் கூறப்படுகிறது. போலீஸார் மீண்டும் அங்கே கூடியவர்களை கலந்து போகுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அதைக் கேட்கும் மனநிலையில் பள்ளிவாசலில் கூடியவர்கள் இல்லை.
இதை அடுத்து வலுக்கட்டாயமாக அங்கிருந்தவர்களை லேசாக தடியடி நடத்தி கலைந்து போகச் செய்துள்ளனர். தடியடி நடத்தியதில் ஓரிருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பள்ளிவாசலில் சிலர் போலீஸார் மீது கற்களை வீசியும், செருப்புகளை வீசியும் தாக்கியுள்ளனர். இதில், காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தென்காசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் சிலரிடம் போலீசார் பேசிக் கொண்ட போது, செங்கோட்டையில் நடந்ததைப் போல் இதையும் பெரிசு படுத்திடாதீங்க… என்று கேட்டுக் கொண்டனர்.
எனினும் இது குறித்த வீடியோக்கள் இப்போது வாட்ஸ் அப் உள்ளிட சமூகத் தளங்களில் வைரலாகி வருகின்றன. மேலும், உள்ளூர் போலீஸார் இதனைக் கையாளக் கூடாது என்றும், பழிவாங்கும் நடவடிக்கையில் முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்கள் ஈடுபட வாய்ப்பு உள்ளதால், துணை ராணுவப் படையினர் வரவழைக்கப் பட வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
அதே நேரம், தங்கள் பக்கம் தவறு இருக்கிறது என்றும், தடை உத்தரவு நேரத்தில் கூடியிருக்கக் கூடாது என்றும், கொரோனோ பரவும் விதத்தில் இஸ்லாமிய சமூகம் மீது ஏற்கெனவே ஒரு குற்றச்சாட்டு கிளப்பப் பட்டிருக்கும் நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் பின்னடைவாக இருக்கும் என்றும் உள்ளூர் ஜமாத்தார் தரப்பில் இருந்து வாட்ஸ் அப் வழியே தகவல் பரவிக் கொண்டிருந்தது.