வாராக்கடன் விவகாரம் பூதாகாரமாய் கிளம்பியுள்ள நிலையில், அது தொடர்பாக தனது கருத்தைத் தெரிவிக்கும் வகையில், உண்மையைப் போட்டுடைத்துள்ளார் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். ‘மீண்டும்’ இந்த மூன்று நபர்களுடைய வராக் கடன் தொகைகளை ‘வராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும்.. என்றும், தொழிலதிபர்களின் வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா என்பது ஏட்டு சுரைக்காய் விவாதம் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ஏற்கெனவே இதே போன்ற நடவடிக்கை எடுக்கப் பட்டது என்றும், இப்போது மீண்டும் அதே நடவடிக்கையை உறுதிப் படுத்த ரிசர்வ் வங்கி முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறி ராகுலுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
முன்னதாக, ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட வங்கி கடன் மோசடி பட்டியலில் நிரவ் மோடி, விஜய் மல்லையா, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம், மெகுல் சோக்சி உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றிருந்தது என்றும், இவர்களது ரூ.68,607 கோடி கடன் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் அரசுத் தரப்பு வெளியிடத் தயங்கியது ஏன் எனவும், அந்தப் பட்டியலில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பாஜக.,வின் நண்பர்கள் இடம்பெற்றுள்ளதால் தான் இவ்விவகாரம் மறைக்கப்பட்டிருக்கிறது என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் குற்றம்சாட்டியிருந்தார்.
ராகுலின் குற்றச்சாட்டுக்கு விளக்கமான முறையில் தனது டிவிட்டர் பதிவுகளில் பதில் அளித்திருந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்! மேலும், வாராக்கடன் என்பது வேறு, கடனை கழித்து கணக்கு வைத்திருப்பது என்பது வேறு. இது குறித்து ராகுல், ப.சிதம்பரத்திடம் டியூசன் படிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், ப.சிதம்பரம் தன்பங்குக்கு, தனது டுவிட்டரில் பதிவிட்ட கருத்து:
ரூ .68,000 கோடி வாராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்தார்களா, நிறுத்தி வைத்துள்ளார்களா என்பது ஏட்டுச் சுரைக்காய் விவாதம். இந்த நடவடிக்கையை மகிழ்ச்சியோடு கொண்டாடுபவர்கள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி மற்றும் விஜய் மல்லையா. இந்த மாபெரும் தவறைத் திருத்துவதற்கு ஒரே வழிதான் உண்டு. ரிசர்வ் வங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உத்தரவிடவேண்டும். மீண்டும் இந்த மூன்று நபர்களுடைய வாராக் கடன் தொகைகளை ‘வாராக் கடன்’ என்று பேரேட்டில் எழுதி அந்தக் கடன்களை வசூலிக்கும் முயற்சிகளை முடுக்கி விடுக என்று உத்தரவிடவேண்டும்… என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் மீண்டும் என்று கூறியிருப்பதன் மூலம், ஏற்கனவே இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாரணையும் தவறிழைத்தவர்கள் மீதான நடவடிக்கையும் நிலுவையில் இருப்பதையும் ப.சிதம்பரம் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார் என்று கருத்துகள் பகிரப்படுகின்றன.