சமூக இடைவெளியைப் பின்பற்றி, டாஸ்மாக் மதுக் கடைகளை முற்றுகை யிடுவோரை நம்பி அவர்களுக்காக மதுக் கடைகளைத் திறந்து வைக்கும் அரசு, மத உணர்வாளர்கள் தங்கள் கடமையான வழிபாடுகளை மேற்கொள்வதை மட்டும் அனுமதிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மது வாங்குவோரே சமூக இடைவெளியைப் பின் பற்றுவார்கள் என்று அரசு நம்பும் போது, சமூக ஒழுக்கம் பேணும் பக்தர்களால் அது முடியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது! எனவே, கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என அரசுக்கு ஆன்மிகவாதிகள் அன்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாக கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் நடக்க இருந்த விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் பெரும் வருத்தமடைந்தனர்.
ஆயினும் பக்தர்களை சமாதானப் படுத்துவதற்காக, முக்கிய கோவில்களில் நடக்கும் தினசரி பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் மட்டும் ‘ஆன்-லைன்’ வாயிலாக ஒளிபரப்பப்பட்டன.
தற்போது கொரோனா தொற்று பரவல் பல மாவட்டங்களில் கட்டுப் படுத்தப் பட்டதால், ஊரடங்கின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அண்மையில் குடிகாரர்களாகிய மதுப் பிரியர்களின் வசதிக்காக ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்பட்டு தினமும் 500 பேருக்கு சமூக இடைவெளியுடன் மது பானங்கள் விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இது போல், கோவில்களிலும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பலரும் அரசின் முன் வைத்து வருகின்றனர்.
டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தை வேறு வழிகளில் திரட்ட வேண்டுமானால், அதற்கு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பிடிக்கலாம் என்று கூறுகிறது அரசு. எனவே டாஸ்மாக்கை மூட இயலாது என்று தெளிவாகக் கூறியது. அதே நேரம், இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கோயில்களைத் திறக்க வேண்டும் என்று கோரப் பட்ட மனுவுக்கு பதில் அளித்த அரசு,மத வழிபாட்டு இடங்களைத் திறந்தால் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகும் என்று பதில் கூறுகிறது. மத வழிபாட்டு இடங்களில் கூடும் கூட்டத்தைக் கட்டுப் படுத்த போலீஸார் அதிக அளவில் இல்லை என்றும் காரணத்தை அடுக்குகிறது அரசு. ஆனால் டாஸ்மாக்கை கையாளும் திறமையை மாநில போலீஸார் பெற்றிருப்பதாக அது பதி வைத்திருக்கிறது.
அரசுக்கு பெரும் அளவில் வருமானத்தை ஈட்டித் தருபவை கோயில்கள். குடி’மகன்கள் விஷயத்தில் காட்டும் ஆர்வத்தை பக்தர்கள் விஷயத்திலும் அரசு காட்ட வேண்டும். டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு 500 பேருக்கு டோக்கன் முறையில் மது பானங்கள் வழங்கப் படுகிறது.
பெரிய கோயில்களாக இருந்தால் எண்ணிக்கையைக் கூட்டி, தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்து அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தலாம்.