பொருளாதாரத் திட்டத்தின் மதிப்பு 20 லட்சம் கோடி அல்ல , வெறும் 1.86 லட்சம் கோடிதான் இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும் பிரதமர் & நிதியமைச்சர் அறிவித்த 20 லட்சம் கோடி பொருளாதார திட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவீட் போட்டு, குற்றம் சாட்டியுள்ளார்.
ஊரடங்கால் நிலைகுலைந்து போயுள்ள இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் வகையிலும் சுயசார்பு இந்தியா என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அந்த திட்டங்களை ஒவ்வொரு துறை வாரியாக நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்தடுத்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஐந்து கட்டங்களாக அறிவித்தார். இந்த சிறப்பு தொகுப்பு ஜிடிபி-யில் 10 சதவீதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
20 லட்சம் கோடி ரூபாய் என்பது பொய்யான தகவல் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் வெறும் ரூ 1,86,650 கோடிதான் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் ‘‘பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ. 20 லட்சம் கோடி அல்ல. வெறும் ரூ 1,86,650 கோடிதான்.
ரூ. 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.