
ஸ்ரீ ராமானுஜ ஜயந்தி
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
ஹிந்து மதம், பௌத்த மதம், கிறிஸ்தவ மதம். முகம்மதிய மதம் என்று மதங்களினுடைய ஸ்தூலப் பெயர்கள் பற்பலவயிருந்தாலும், அவை எல்லாவற்றினுள்ளும் ஊடுருவிச் சென்று வியாபித்து நிற்கும் கொள்கைகள் மூன்று தன்மையனவாம்; அவையாவன:- துவைதம், விஸிஷ்டாத்வைதம், அத்வைதம்.
இவற்றினுள்ளே, விஸிஷ்டாத்வைதமானது ஞானமும், பக்தியும் நலமுறச் ஸமமாகக் கலந்துள்ள மதம் என்பதில் எள்ளளவும் ஸந்தேகமில்லை.
துவைத மத சித்தாந்தமானது வெறும் பக்தியையே ஆதாரமாகக் கொண்டது: அத்வைதமானது கேவலம் ஞானத்தையே ஆதாரமாகக் கொண்டது; ஆனால், விசிஷ்டாத்வைத மதமோ பக்தி, ஞானம் இவ்விரண்டையும் ஸமப்படுத்தி, ஹிருதய உணர்ச்சியுடனே ஆத்ம ஞானத்தையும் ஊட்டுகின்றது.
கேவலம் பக்திமாத்திரம் இருந்தால் அது வெறும் மூட பக்தியாகி, குருட்டு விஸ்வாசமாக முடிந்து, ஒரு மனிதன் ஆசையுடனே வளர்த்த கரடிக்குட்டியானது அவன் முகத்திலே ஒரு ஈ உட்கார, அவன் மீது தனக்குள்ள அன்பு மிகுதியினால் அதனை அது சகிக்காது, அந்த ஈயைக் கொல்லக் கருதி, அவன் முகத்திலே ஓங்கி ஒரு அறை அறைய, ஈயும் அவனும் ஆகிய இருவரும் இறந்துவிட்ட கதை போலாய் விடுகின்றது.
வெறும் ஞானமோ ஹிருதயத்திலே ஈரம் வளர்க்காது. அன்பு என்பதை அறியாது, கேவலம் வறட்சி பெற்ற அறிவாகி விடுகின்றது. ஆனால், பக்தியும், ஞானமும் சேர்ந்த விஸிஷ்டாத்வைதமோ இவ்விரண்டையும் ஏகோபித்து ஒரே காலத்தில் வளர்ந்து, “ஹிருதயம், மூளை ஆகிய இரண்டிலே ஒன்றைவிடஒன்று உயர்ந்ததில்லை”, என்றும் “மநுஷ்ய வர்க்கத்தின் துக்க நிவிர்த்திக்கு இவ்விரண்டும் அவசியமேயாம்”, என்றும் நிரூபிக்கின்றது. ஆகையால், விஸிஷ்டாத்வைதமே சிரேஷ்டமான மதமாகும்:
ஆகவே, அதனைப் பிரகாசப்படுத்திய ஸ்ரீ ராமானுஜர் ஓர் மஹா புருஷர் என்பதில் என்ன ஸந்தேகம்? இம் மஹானுடைய அன்புக்கும் அறிவுக்கும் இணையாக எதையும் சொல்ல முடியாது.
ஸ்ரீ ராமானுஜர் நூலின் முன்னுரையில் விடுதலைப் போராட்டத் தியாகி ஸ்ரீ சுப்ரமணிய சிவா



