மதுரை: மக்களின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குவதில் ஒன்று தண்ணீர். அதிலும் உணவகங்களில் பலவற்றிலும் இன்றும் கூட, பிளாஸ்டிக் குடங்கள் மற்றும் சில்வர் பானைகளில்தான் குடிக்க தண்ணீர் வைக்கப்பட்டு வருகிறது. மேலும், சில உணவகங்களில், வெளியே இருந்தும் வரும் மக்களுக்கு அலுமினிய, பித்தளை பாத்திரங்களில் குடிநீர் வைக்கப்படுவதை இன்றும் காணமுடிகிறது.
இன்னும், மதுரை நகரில் சிறிய உணவகங்களில் சிறிய சிறிய பிளாஸ்டிக் கேன்களில் குடிக்க தண்ணீர் வைத்துள்ளனர். எனினும், இவற்றை எல்லாம் தவிர்த்து மக்கள் நலனில் அக்கறையுள்ள சில உணவகங்களும், தமிழகத்தில் இருக்கத்தான் செய்கின்றன.
மதுரை காந்தி மியூசியம், பூங்கா முருகன் கோயில் அருகே உள்ள ஒரு உணவகத்தில், மக்களுக்கு நல்ல பாத்திரத்தில் தண்ணீர் வழங்கவேண்டும் என்ற நோக்குடன், செப்புக் குடத்தில் மக்கள் குடிப்பதற்காக தினசரி தண்ணீர் வைக்கப்படுகிறது.
உணவகத்துக்கு வருவோர் தவிர, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோயில் மற்றும் காந்தி மியூசியத்துக்கு வருவோரும் இந்த செப்பு…. தாமிரக் குடத்தில் ஊற்றி வைக்கப் படும் தண்ணீரைக் குடிப்பதுடன், பாட்டில்களிலும், இந்த தாமிரக் குடம் தண்ணீரை பிடித்து செல்வதைக் காணமுடிகிறது.
இதே போல் மதுரை மட்டுமில்லாமல், பெரிய நகரங்களில் உள்ள உணவகங்களிலும், தாமிரக் குடத்தில் நல்ல தண்ணீரை வைத்து மக்களுக்கு குடிக்க ஏற்பாடு செய்தால், உடல் நலம் பாதுகாப்படுவது நிச்சயம்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை