முழு ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜூன் 19ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை வங்கிகளுக்கு செல்லும் ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்து செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.
21 மற்றும் 28-ஆம் தேதி ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மருத்துவமனைகள், மருந்துக்கடைகள், பால் நிலையங்கள், அமரர் ஊர்திகள் தவிர மற்ற கடைகள் மற்றும் வாகனங்கள் எதற்கும் அனுமதியில்லை எனப்பட்டுள்ளது.
அதேசமயம் அவசர மருத்துவ தேவைக்கு மட்டும் பிற வாகனங்கள் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இ-பாஸ் வைத்திருப்பவர்கள் அதை பெரிய அளவில் ஜெராக்ஸ் எடுத்து காவல்துறையினருக்கு தெரியும்படி காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. போலியான இ-பாஸ் வைத்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கத்தின்போது அத்தியாவசிய தேவைக்காக கடைகளுக்கு செல்லும் மக்கள் வாகனங்களை பயன்படுத்தாமல் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குள் நடந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி எந்தவித அனுமதி சீட்டுமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும், உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.