ராமநாதபுரம்:
போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாகிஸ்தான் நபர் ஒருவர், போலி ஆவணங்களுடன் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியில் முன்னர் முருகன் கோயிலாக இருந்து பின்னாளில் தர்காவாக மாற்றப்பட்ட தர்கா ஒன்று உள்ளது. இங்குள்ள தனியார் விடுதியில் சந்கேத்திற்கு இடமான வகையில் முதியவர் ஒருவர் தங்கியிருப்பதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அங்கே சென்று விசாரித்தனர்.
அப்போது, அந்த முதியவரிடம் நடத்திய விசாரணையில், இலங்கை உல்பெண்டால் பகுதியில் இருந்து தாம் வருவதாகவும், தனது பெயர் காசிம்பாய் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் முதியவர் தங்கியிருந்த அறையை சோதனை செய்தபோது, இந்திய ரூபாய் 3 ஆயிரம், பாகிஸ்தான் ரூபாய் 2500 உள்பட இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. அவர் மும்பை, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளுக்கு சென்று வந்த ஆதாரங்களும் சிக்கின.
மேலும் பீகார் மற்றும் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த ஆதார் கார்டு நகலில் தனது புகைப்படத்தை ஒட்டி, அதைப் பயன்படுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த முதியவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து கியூ பிரிவு போலீசார் வரவழைக்கப் பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர் பாகிஸ்தானில் உள்ள கராச்சியைச் சேர்ந்த அலி முகம்மது மகன் முகம்மது யூனுஸ் (வயது 67) என்பது தெரியவந்தது.
அந்த நபர் போதைப் பொருட்கள் கடத்துவதற்காக இந்தியா வந்ததாகவும், அதன்படி கடந்த ஏப்ரல் இலங்கைக்குச் சென்ற அவர் அங்கே போதைப் பொருள் கடத்தல்காரர்களைச் சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர்கள் கூறியபடி அங்கிருந்து கள்ளத் தோணி மூலம் தமிழகத்துக்கு வந்தவர், பின்னர் அகமதாபாத்தில் குறிப்பிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் நபரைச் சந்தித்துள்ளார்.
மேலும் போதைப் பொருள் விநியோகம் தொடர்பாக, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் வேறு சில இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். அதன் பின், ஏர்வாடியில் இருந்த இருவர் தொடர்பு கொண்டதன் அடிப்படையில் ஏர்வாடிக்கு வந்ததாகத் தெரிய வந்தது. அவரிடம் தேசிய பாதுகாப்பைக் கையாளும் மாவட்ட க்யு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியதில் பல விவரங்கள் தெரியவந்தன.
முகம்மது யூனுஸ் கள்ளத் தோணி மூலம் இலங்கை செல்ல திட்டமிட்டு அதற்காக ஏர்வாடியில் தங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக கடற்காற்று அதிகமாக இருந்ததால் இலங்கைக்கு செல்ல முடியவில்லை என்றும் கடல் இயல்பான நிலைக்கு வந்த பிறகு இலங்கை செல்ல முகம்மது யூனுஸ் திட்டமிட்டதாகக் கூறியுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. முகம்மது யூனுசிடம் போதை பொருட்கள் எதுவும் கைப்பற்றப்பட வில்லை. போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அதன் பின், அவரை சட்ட விரோதமாக போதைப் பொருள் விநியோகிப்பதாகக் கூறி அழைத்து வந்த ஏர்வாடியைச் சேர்ந்த இருவரையும் கைது செய்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த யூனுஸ், பின்னர் பரமக்குடியில் உள்ள நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தப் பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பெறப்பட்டது. அதன்பின், சென்னை புழல் சிறையில் உள்ள வெளிநாட்டினரை அடைத்து வைக்கும் சிறப்பு செல்லில் அடைக்க அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
பிரதமர் மோடி வரும் 27ஆம் தேதி, இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மண்டபத்தைத் திறந்து வைக்க ராமேஸ்வரம் வர உள்ள நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த முதியவர் கைதாகி இருப்பது இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.