திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர்களில் 15 பேர் உள்பட, தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை ஊழியர்கள், லட்டு தயாரிக்கும் ஊழியர்கள் என மொத்தம் 170 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏழுமலையான் கோவிலில் பெத்த ஜீயர் என்று அழைக்கப்படும் பெரிய ஜீயர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதை அடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனால் அவரை திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஜீயர் சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடித்து வருவதால் பின்னர் அவர் தனது மடத்திலேயே வைத்து சிகிச்சை அளிக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து சீடர்கள் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னாள் பிரதான அர்ச்சகருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே, திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு பக்தர்களை தொடர்ந்து அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து ஆந்திர அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.