மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த 14 வயது சிறுமி. கடந்த திங்கட்கிழமை அந்த சிறுமிக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், மயிலாடுதுறை மகளிர் காவல்நிலையத்தில் மாவட்ட சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ் புகாரளித்தார். சிறுமியிடம் விசாரணை நடந்ததில், சிறுமியின் சகோதரி கணவர் தினேஷ், அவரைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கியது தெரியவந்தது.
சிறுமி கருவுற்றதால் அதைக் காட்டி அவர் சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது; இதற்கு சிறுமியின் தாயே உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் தாய் மற்றும் சகோதரி கணவர் மீது போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மாரியம்மாள் மீதும், சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வேறு சில நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.