தேசீய கீதம் ‘ஜன கண மன’ கீதத்தின் வழியே கணபதியின் துதி!
– ஒரு விளக்கம்.
தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்.
“ஜன கண மன அதி நாயக ஜயஹே!”
நம் தேசீய கீதத்தின் இந்த முதல் வரியின் விளக்கம்:-
தோன்றியவை, தோற்றம் கொண்டவை அனைத்தும் ‘ஜனம்’. முதலில் தோன்றியவை பஞ்ச பூதங்கள். அவற்றிலிருந்து மீதியனைத்தும் தோன்றின. அவ்விதம் பார்த்தால் கிரகங்கள், நட்சத்திரங்கள், தேவதைகள்… இவையனைத்தும் ஜனங்களே. பிறந்தவை அனைத்தும் ஜனங்களே அல்லவா? பிறவி என்ற தர்மம் கொண்டவை அனைத்தும் ‘ஜனம்’.
“சர்வே ஜீவா: கண்யா: கணா: தேஷாம் பரி கணேஷ:” என்பது விளக்கம். ஜீவர்கள் அனைவரும் கணங்களே. கணக்கீட்டிற்கு உட்பட்டவர்கள்.
தேவர்கள் எவ்வளவு பேர்? தேவர்களுள் ஒரு பிரிவினரான வசுக்கள் 8 பேர். ருத்திரர்கள் 11 பேர். ஆதித்யர்கள் 12 பேர். கணக்கு உள்ளதல்லவா? கணக்கிட முடிவதால் இவர்களனைவரும் கணங்களே! கிரகங்கள் எத்தனை? 9. இன்னும் கிரகங்கள் இருக்கின்றனவாம். மொத்தத்தில் கிரகங்களுக்கும் எண்ணிக்கை இருப்பதால் அவையும் கணங்களே.
நட்சத்திரங்கள்? 27. அவற்றின் பிடியில் நாம் உள்ளோம். எனவே இவையனைத்தும் ஜனம், கணம் என்பவற்றின் கீழ் வருகின்றன. எனவே, “ஜன கண மன அதி நாயகன்” – கணபதியே! வேறல்ல.
இதை எடுத்துக் கூறினால் தேசீய கீதத்தில் கூட ஹிந்து மதக் கொள்கை இருப்பதாகக் கூறி எடுத்துவிடச் சொல்வார்களோ, என்னவோ!
பாரத தேசத்தில் ஒவ்வொன்றும் ஹிந்துயிஸமே! ஹிந்து மதக் கொள்கையோடு கூடியதே. அதில் மறுப்பதற்கோ சந்தேகத்திற்கோ இடமில்லை. பாரதீயம் ஹிந்துயிஸமே!
எனவே அந்த கணபதியிடம் நாம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான். அது என்ன?
“பாரத பாக்கிய விதாதா!” (விதாதா என்றால் படைப்பவன்). “ஸ்வாமி! பாரதத்தின் பாக்கியத்தை படைப்பவன் நீயே!”
அதனால் தான் விநாயக சதுர்த்தி வந்தால் போதும். எங்கு பார்த்தாலும் கணபதி வழிபாடு வியாபித்து இருப்பதை பார்க்க முடிகிறது. அச்சமயத்தில் ஹிந்து மதத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கூட மெளனமாக கணபதிக்கு நமஸ்காரம் தெரிவிக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.
அது எங்கிருந்து எங்கு வரை பரவியுள்ளது?
“பஞ்சாப சிந்து குஜராத மராட்டா திராவிட உத்கள வங்கா!
விந்திய ஹிமாச்சல யமுனா கங்கா உச்சல ஜலதி தரங்கா!”
இவை அனைத்திலும்
“தவ சுப நாமே ஜாஹே! தவ சுப ஆசிஸ மாஹே!”
“ஸ்வாமி! உன் நாமத்தை இந்த தேசம் மொத்தம் எதிரொலிக்கிறது. உன் சுப ஆசிகளை விழைகிறது”.
அது மட்டுமல்ல. எங்கு பார்த்தாலும் அதே முழக்கம். வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கணபதி நவராத்திரிகள், அவர் மேல் கீதங்கள், ஹோமங்கள், பஜனைகள். எங்கு பார்த்தாலும் கணேச தத்துவத்தை போதிப்பவர்கள் – என்று இவ்வாறு பார்க்கையில்…
“காஹே தவ ஜய காதா!”
எதனால் இவ்வாறு நிகழ்கிறது என்று கவனித்தால், ஜன கண நாயகன் ஆதலால்.
“ஜன கண மங்கள தாயக!”
அப்படிப்பட்ட ஸ்வாமிக்கு
“ஜயஹே! ஜயஜெ! ஜயஹே!
ஜய ஜய ஜய ஜயஹே!”
நம் தேசீய கீதத்தின் வழியே கணபதியைப் போற்றும் வகையில் இத்தனை அற்புத பொருள் பொதிந்திருப்பதை நாம் உணரும் போது மெய் சிலிர்க்கிறது!