திருவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு வனப்பகுதியில், மலைவாழ் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் 9 அடி ராஜநாகம் புகுந்ததால், வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் செண்பகத்தோப்பு வனப்பகுதி உள்ளது.
இப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, கருஞ்சிறுத்தை, காட்டெருமை, கொடிய விஷம் கொண்ட ராஜநாகங்கள் மற்றும் மலைப்பாம்புகள் அதிகமாக உள்ளன.
கொரோனா ஊரடங்கால், சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்வதில்லை. இதனால், வனவிலங்குகள், பாம்புகள் அடிவாரப்பகுதியில் சுதந்திரமாக உலா வருகின்றன.
செண்பகத்தோப்பு நுழைவாயிலில் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ராஜநாகம் ஒன்று புகுந்தது.
இதைப் பார்த்து வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். பாம்பு வெளியே செல்லாதபடி வீட்டைப் பூட்டினர். தகவலின்பேரில், மாவட்ட வனஅதிகாரி முகமது சபாப், திருவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரி வேலுச்சாமி தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று வீட்டை திறந்தனர்.
இவர்களை பார்த்ததும் ராஜநாகம் சீறியது. 9 அடி நீளமிருந்த அதை லாவகமாக மடக்கிப் பிடித்த வனத்துறையினர், அடர்த்தியான வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர்.