ராணுவ வீரர் தனது கர்ப்பிணி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கீழ்ஆலத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயதான புருஷோத்தமன் ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவருக்கும் கே. வி.குப்பத்தைச் சேர்ந்த 26 வயதான அமுல் என்ற பெண்ணுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது அமுல் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். புருஷோத்தமனின் தந்தை ஆறுமுகம்(75) உடல் நலக்குறைவால் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை காண கடந்த 25ஆம் தேதி வேலூர் வந்த புருஷோத்தமன் தனியார் மருத்துவமனைக்கு எதிரே உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
மேலும் நேற்று முன்தினம் ஆகஸ்டு 26 அன்று தனது மனைவியுடன் தங்கி இருந்த புருஷோத்தமன் மறுநாள் ஆகஸ்டு 27 மதியம் வரை அறையின் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் புருஷோத்தமனின் உறவினர்களுக்கு தகவல் அளித்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது புருஷோத்தமன் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடியும், அவரது மனைவி சடலமாக படுக்கையிலும் கிடந்துள்ளார்.
இதுகுறித்து உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.