தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் தவசாயிஅம்மாள் (93) திங்கள்கிழமை நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட சிலுவம்பாளைம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டரின் மனைவி தவசாயி அம்மாள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரான இவர், திங்கள்கிழமை இரவு சுமார் 11 மணி அளவில் அவரது இல்லத்தில் காலமானார்.
வயது மூப்பின் காரணமாக காலமான அவருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, கோவிந்தராஜ் ஆகிய இரு மகன்களும், ரஞ்சிதம் (எ) விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். தவசாயிஅம்மாளின் கணவர் கருப்ப கவுண்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார்.
தாயார் காலமானதை அடுத்து இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சொந்த ஊர் சென்றார். அதனால், தூத்துக்குடியில் முதல்வர் தலைமையில் இன்று நடைபெற இருந்த கொரோனா தடுப்பு ஆய்வுப் பணிகள் குறித்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் சுற்று பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது..
இன்று காலை தனது தாயாரின் உடலுக்கு முதல்வர் பழனிசாமி இறுதிச்சடங்குகளைச் செய்தார். தொடர்ந்து சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
முதல்வரின் தாயார் உடலுக்கு உறவினர்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். துணை முதல்வர் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். பின்னர் அவரும் சேலம் சென்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவையொட்டி, அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆளுனர் பன்வாரிலால் புரோகித் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தெலங்காணா ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாமக., நிறுவுனர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டனர்.