சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி, விஷாலை முன்மொழிந்த 10பேரில் இருவர் அந்த மனுவில் தாங்கள் கையொப்பமிடவில்லை எனக் கூறி தன்னிடம் புகார் அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஆளுங்கட்சியினர் மிரட்டினர் என்பதால், அடுத்தடுத்து இருவரும் மாறிப்பேசுவதாக விஷால் புகார் கூறினார். இந்நிலையில் தன்னை முன்மொழிந்தவர்கள் என விஷால் கூறும் சுமதி, தீபன் ஆகிய இருவரும் நேற்று ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை சந்தித்து, விஷாலின் வேட்பு மனுவைத் தாங்கள் முன்மொழிந்து கையொப்பமிடவில்லை என்று கூறினர். மேலும், தாங்கள் எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சி இவ்வாறு கூறவில்லை என்றும், தெளிவாகவே இதைத் தெரிவிப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அவர்கள் வாக்குமூலம் அளித்தபோது, தேர்தல் பார்வையாளர்களும் உடனிருந்தனர். இந்த வாக்குமூலத்தின் வீடியோ பதிவை அதிகாரிகள் இன்று வெளியிட்டனர்.