மேலூர் பகுதிகளில், சசிகலாவை அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு வரவேற்கும் விதமாக சுவரொட்டி ஒட்டியுள்ளார் ஓர் அதிமுக பிரமுகர்!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சூரக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் துரை என்ற மதியழகன், இவர் 1983 ம் ஆண்டு முதல் அதிமுகவில் உறுப்பினராகவும் இதனைத் தொடர்ந்து அதிமுகவில் சூரக்குண்டுகிளைக் கழக செயலாளராகவும் இருந்து வந்துள்ளார்
இந்நிலையில் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரான ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, டிடிவி தினகரன் தொடங்கிய அமமுக வில் இணைந்து கட்சி பணியில் ஈடுபட்டு வந்தவர், கடந்த ஆண்டு மீண்டும் அதிமுகவில் இணைந்து சூரக்குண்டு பகுதிகளில் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றார்,
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலாவை வரவேற்றும், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு மேலூர் நகர் பகுதிகளில் முக்கிய இடங்களில் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.
தற்போது சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டி வரும் அதிமுக நிர்வாகிகள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மேலூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…