செங்கல்பட்டு மாவட்டம் தச்சூர் பகுதியை சேர்ந்த எட்வர்ட் லாரன்ஸ் (48). இவர் அப்பகுதியில் தச்சு தொழில் செய்து வருவதாக கூறப்படுகின்றது.
இவருக்கு சரோவர்ஷா (41) என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். திருமணமாகி 21 ஆண்டுகள் ஆண்டுகளான நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சென்னை மாதவரம் பால்பண்ணை அருகில் உள்ள எம்.எம்.டி.ஏ முதல் தெருவில் வாடகை வீட்டில் குடியேறி உள்ளனர்.
மேலும் எட்வர்ட் லாரன்ஸ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, சண்டை போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
அதுபோல, நேற்று இரவும் இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த எட்வர்டு லாரன்ஸ் தீடீரென சமையல் அறையில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் மனைவி சரோவர்ஷாவை வயிறு, மார்பு மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியதில் இரத்தம் வெளியேறியுள்ளது. இதனால், அவர் பயங்கர வலியால் அலறித்துடித்தார்.
பயங்கர இரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அருகில் இருந்தோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இச்சம்பவத்திற்கு காரணமான தலைமறைவான எட்வர்ட் லாரன்ஸை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.