சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (68). லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளரான இவர் தனது மனைவி சாந்தி (60), மகள் பத்மபிரியா (34), மருமகன் ஸ்ரீபால் (42), பேரன் ஆர்யா (12), பேத்தி மிருதுளா (8) ஆகியோருடன் ஒரே காரில் திருவண்ணாமலை சென்றுள்ளார். அங்கு உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். காரை ஸ்ரீபால் ஓட்டி வந்துள்ளார்.
திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி என்ற இடத்தில் இவர்கள் சென்ற கார் சென்றப்போது எதிரே வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொருங்கியது. பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதனிடையே இந்த விபத்தில் காரில் பயணித்த ஸ்ரீபால், பத்மபிரியா, சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சதீஷ்குமார், ஆர்யா, மிருதுளா ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிச்சென்ற அப்பகுதி மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு சென்ற தீயணைப்புத்துறையினர், கிராம மக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே, சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்தில் தாத்தா, பாட்டி, தாய், தந்தையை இழந்து 2 பிள்ளைகளும் தவிப்பது பெரும் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது.