பெரம்பூர் ரயில் நிலையம் – பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள இருப்பு பாதையில், கடந்த மாதம் 12ம் தேதி இரும்பு ராடு ஒன்று தண்டவாளத்தில் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் மற்றும் ரயில்வே பணியாளர்கள் விரைந்து சென்று அந்த இரும்பு ராடை அகற்றினர். அதன் பிறகு, இருப்புபாதையில் இரும்பு ராடை வைத்தது யார் என்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதில், 2 பேர் இருப்பு பாதை வழியாக நடந்து செல்வதும், ஓர் இடத்தில் அவர்கள் இரும்பு ராடு வைப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி கேமரா பதிவுகள் உதவியோடு எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் (22), வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பாலாஜி (19) ஆகிய இருவரை பிடித்து விசாரித்த போது இவர்கள் குடிபோதையில் இருப்புபாதை நடுவே இரும்பு ராடு வைத்ததாகக் கூறினர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட ரயில்வே போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நேற்று முன் தினம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.