மேற்குவங்கத்தில் தந்தை இறந்த அடுத்த நாளில் தேர்தல் பணிக்கு வந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.
ஹவுரா மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான முக்தா ஆர்யா என்ற பெண் அதிகாரியின் தந்தை கடந்த 5ஆம் தேதி திடீரென மாரடைப்பால் காலமானார்.
அதனால், தனக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தந்தையின் இறுதிச் சடங்கிற்கு சென்றார் முக்தா.
இந்நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதி தனது மாவட்டத்தில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றதை அடுத்து தந்தை இறந்த அடுத்தா நாளே அந்த ஐஏஎஸ் அதிகாரி பணிக்கு வந்தார். நாள் முழுவதும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து அனைத்து பணிகளையும் கண்காணித்தார் .
தந்தை இறந்த அடுத்த நாளே பணிக்கு வந்த அவரை அதிகாரிகளும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மேற்குவங்கத்தில் நடந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவானது மூன்று பெண் ஐஏஎஸ் அதிகாரிகளால் நடத்தப்பட்டது.
முக்தா ஆர்யாவுடன் சேர்த்து தெற்கு 24 பர்கானா ஆட்சியர் அந்தரா ஆச்சார்யா, ஹூக்லி மாவட்ட ஆட்சியர் தீபா ப்ரியா ஆகியோர் தேர்தலை நடத்தி முடித்தனர்.
கடமை தவறாத அந்த பெண் அதிகாரிகளை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேற்குவங்கத்தில் எட்டு கட்டமாக தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.