கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்தார்.
நேற்று இரவு இரவு 10 மணி முதல் அமலுக்கு வந்துள்ள ஊரடங்கு வரும் 26-ம் தேதி காலை 5 மணிவரை நடைமுறையில் இருக்கும். அத்தியாவசிய காரணங்கள் இன்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சுனிதா கெஜ்ரிவால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
மனைவி சுனிதாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தில்லியில் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.