விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி கடத்தல் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான டாரஸ்லாரி மதுரை சாலையில் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த ஏழாம் தேதி காலை நிறுத்தப்பட்டிருந்த லாரி காணாமல் போனதை அறிந்து மகேஸ்வரன் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சக்திகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடத்தப்பட்ட லாரி கரூர் சாலையில் வாகனம் எண் மாற்றப்பட்ட நிலையில் போலீசார் சுற்றி வளைத்து லாரியை பறிமுதல் செய்தனர்.
லாரி திருட்டு சம்பந்தமாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ஷேக் சையது அலி (வயது 43), அப்துல் காசிம் (வயது 24), முகமது நசீம் (வயது 37) மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், இந்த லாரியை திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஷேக் சையது அலி என்பவரின் லாரியையும் கடத்தல்காரர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா கால ஊரடங்கில் சாலையோரத்தில் நிறுத்தப் பட்டிருந்த லாரி திருடப்பட்ட சம்பவத்தினால் லாரி உரிமையாளர்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.