கொசுவை விரட்ட நினைத்து பாட்டி மற்றும் பேரன் உயிரிழந்த சம்பவம் பெரும் சொகதைஎற்படுதி உள்ளது.
61 வயதான சொக்கலிங்கம் என்ற நபர், சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் பொன்னி நகர், திருவள்ளுவர் தெருவில் வசித்து வந்துள்ளார்.
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு 55 வயதான புஷ்பலட்சுமி என்ற மனைவியும், 38 வயதான மல்லிகா என்ற மகளும், 11 வயதான விஷால் என்ற பேரனும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களின் வீட்டில் அதிக அளவில் கொசு தொல்லை இருந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்த தட்டில், அடுப்பு கரியை போட்டு தீ வைத்து வீடு முழுவதும் புகை மூட்டத்தை பரப்பி உள்ளனர்.
இந்நிலையில், புகை குறைவதற்கு முன்பே அந்த அறையில் இருந்த ஏ.சி.யை ஆன் செய்து கதவுகளை அடைத்து விட்டனர்.
இதில் அங்கு படுத்து தூங்கிய 4 பேரும் மூச்சுத்திணறி படுக்கையிலேயே மயங்கினர். நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் சொக்கலிங்கம் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது வீட்டின் மாடியில் வாடகைக்கு வசிக்கும் சீதா என்பவர், அதே பகுதியில் வசிக்கும் சொக்கலிங்கத்தின் மகன் வேலுவுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் அங்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தனது தாய், தந்தை உள்பட 4 பேரும் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 4 பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் புஷ்பலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.
மேலும் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருடைய பேரன் விஷாலும் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
மேலும் சொக்கலிங்கம், அவருடைய மகள் மல்லிகா இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தந்தை-மகள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொசுவை விரட்ட போடப்பட்ட புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி பாட்டி-பேரன் உயிரிழந்ததும், தந்தை, மகள் இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.