அயோத்தி நாயகன், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர், ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநர் கல்யாண்சிங் உடல்நலக் குறைவால் காலமானார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்யாண்சிங் (89).
கடந்த 1967ஆம் ஆண்டு முதல் ஒன்பது தேர்தல்களில் எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கப் பட்டவர். உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு முறை முதலமைச்சராகவும் இருந்துள்ளார். அயோத்தி நாயகன் என்று இவர் அழைக்கப் படக் காரணமாக இருந்தது, 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப் பட்ட விவகாரம் தான். அயோத்தி ராமர் கோயில் குறித்து நடந்த ரத யாத்திரைகளில் தீவிரமாக செயலாற்றியவர். பின்னாளில் இவர் முதல்வராக இருந்த போதுதான், அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடம் இடிக்கப்பட்டது. தற்போது அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பாதைகள் சுமுகமாக தீர்க்கப் பட்டு, கோயில் கட்டப் பட்டு வருகிறது. அவர் கண்ட கனவு நனவாவதைப் பார்க்கும் முன்பே தமது 89வது வயதில் அவர் காலமானது, தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது தைரியமான நடவடிக்கைகளால், அயோத்தி விவகாரத்தில் கட்சிக்குள்ளேயும் வெளியேயும் விலக்கி வைக்கப்பட்டவராகவும் இருந்தார். இதன் காரணத்தாலேயே இரு முறை பாஜக.,வை விட்டு வெளியேறி, பின்னர் மீண்டும் கட்சியில் சேர்ந்தார். 1999ஆம் ஆண்டு தனிக் கட்சி தொடங்கி செயலாற்றினார். ஆனால் பின்னர் 2004 ஆம் ஆண்டில் பாஜ.,வுடன் இணைந்தார். அதை அடுத்து 2004ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக.,சார்பில் போட்டியிட்டு எம்பி., ஆனார்.
பின்னர் மீண்டும் வெளியேறி சுயேச்சையாகப் போட்டியிட்டு, 2009ம் ஆண்டில் எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் இரண்டாவது முறையாக 2014ஆம் ஆண்டில் பாஜக.,வில் இணைந்தார். அதன் பின்னர், ராஜஸ்தான் மாநில ஆளுநராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், லக்னோவில் உள்ள சஞ்சய்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆக.21 சனிக்கிழமை இரவு அவர் காலமானார்.
கல்யாண்சிங் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் குறிப்பு…