~ ஜடாயு, பெங்களூர்
இந்துப் பண்பாட்டை, வேதநெறியை, சைவசமயத்தை நிலைநிறுத்துவதையே தனது ராஜதர்மமாகக் கொண்டு வாழ்ந்த இந்துப் பேரரசர் ராஜேந்திர சோழர். இது எல்லாவற்றையும் ஒழிப்பதற்காகவே 24×7 வேலை செய்து கொண்டிருக்கும் கிறிஸ்தவப் பாதிரி ஜெகத் கஸ்பர். பின்னவர் முன்னவரைப் பற்றிப் பேசுவது என்பது கசாப்புக் கடைக்காரன் ஜீவகாருண்ய செம்மல்களின் வரலாற்றைப் பற்றிப் பேசுவது போல. இது அசிங்கம், அவலம், வக்கிரம்.
இணையத்தில் இப்போது வலம் வந்து கொண்டிருக்கும் இந்தப் போஸ்டரைப் பார்த்தவுடனே நாம் கேட்கவேண்டிய கேள்வி இதுவல்லவா? ஆனால், இந்த மையமான கேள்வியை விட்டுவிட்டு, “சோழனின் பேரை ராசேந்திர (ராஜேந்திர என்று அல்லாமல்) என்றும் ஜெகத் கஸ்பர் பெயரை “ஜெ” போட்டும் எழுதியிருக்கிறார்கள்.. தீராவிடம் – ஊபீஸ் – பாவாடை” என்று கெக்கலித்துக் கொண்டிருக்கிறார்கள் “காவிகள்” எனப்படும் உள்ளூர் இந்துமத அபிமானிகள்.
உண்மையான, சீரியஸான பிரசினையை விட்டுவிட்டு, சில்லறைத்தனமான எழுத்து – உச்சரிப்பு இத்யாதி உதிரி சமாசாரங்களை வைத்து சீறி காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். வளருங்கள் சகோதரர்களே.
உண்மையில் இதில் நாம் சுட்டிக்காட்ட வேண்டியது திராவிட – கிறிஸ்தவ – தமிழ் தேசிய – பெரியாரிஸ்ட் கும்பல்களின் கயமைத்தனமான இரட்டைவேடத்தை.
அதாவது, ராஜராஜன், ராஜேந்திரன் பெயரையும் சிலையையும் வைத்துக் கொண்டு தமிழ்ப் பெருமை, தமிழ் மன்னன் என்று கூச்சலிடுவது. அதே வீச்சில் சிவன், விஷ்ணு, தேவி, ஷண்முகர், விநாயகர் உள்ளிட்ட தெய்வத் திருவுருவங்களையும் இந்துமதக் கோட்பாடுகளையும் தத்துவங்களையும் ஏளனம் செய்வது, அவமதிப்பது, வெறித்தனமாக எதிர்ப்பது, பிராமண வெறுப்பை உமிழ்வது. என்ன இழவு “தமிழ் உணர்வு” இது?
இந்த ராஜராஜனும், ராஜேந்திரனும் பகுத்தறிவுப் பகலவன்களோ செக்யுலர் சிங்கங்களோ எல்லாம் அல்ல. அதிதீவிர வைதிக மதப்பற்றும் சிவபக்தியும் வாய்த்திருந்த பேரரசர்கள்.
சிவபாதசேகரன் என்றே பெயர் சூட்டிக்கொண்டவர் ஒருவர். “கோப்ராஹ்மண ப்ரதிபாதக” என்று பண்டைக்கால இந்து மன்னர்கள் அனைவரையும் போலத் தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டவர்கள் இந்தப் பேரரசர்கள். சோழமண்டலத்திலும் மேலும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலும் பிரம்மதேயங்களையும் சதுர்வேதி மங்கலங்களையும் உருவாக்கி வேதநெறியை வளர்த்தவர்கள். மாபெரும் நீராதாரங்களை உருவாக்கியவர்கள். மகத்தான கோயில்களை எழுப்பியவர்கள்.
உண்மையில் அவர்களது பெருமையை வரலாற்றில் இன்றுவரை நிலைநிறுத்தியிருப்பவை தர்ம சிரத்தையினால் செய்யப்பட்ட இத்தகைய செயல்கள் தானே அன்றி, வெறும் போர் வெற்றிகள் மட்டுமல்ல. ஆனால் இந்தத் தமிழ்ப்பெருமை வாதிகள், இது எல்லாவற்றையும் கடாசிவிட்டு ராஜராஜ சோழரையும் ராஜேந்திர சோழரையும் ஒரு போர்வெறி பிடித்த, “அன்னியரை” வெற்றிகொண்ட சோழ அரசர்கள் என்பதாகக் குறுக்கி அதைமட்டும் கொண்டாட விழைகிறார்கள் என்றால் அதற்கு என்ன பொருள்?
“இரண்டாயிரம் ஆண்டுக்கால தமிழ் இந்துப் பண்பாடு, கலாசாரம், தத்துவம், ஆன்மீகம், கலை அனைத்தையும் மறுதலிப்போம். அவமதிப்போம். ஆனால் வரலாற்றிலுள்ள ஒரு பேரரசனைத் தனியாக உருவி எடுத்து இனவெறியின் அடையாளமாக மட்டும் அவனை முன்னிறுத்துவோம். எங்களுக்கு அதுதான் வேண்டும், வேறு எதுவும் தேவையில்லை”.
தமிழ், தமிழன் என்ற பெயரில் இந்த வகையான இனவெறியையும் வெறுப்புணர்வையும் வளர்க்கும் கருத்தியல் தான் ஜெகத் கஸ்பர் ராஜேந்திர சோழனைப் பற்றிப் பேசுகிறார் என்பதில் உள்ளது. அதைத் தான் நாம் சுட்டிக் காட்டவேண்டும்.