விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -26
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்
26. Discipline
உறக்கத்தை உறங்கடித்தால்…!
1997 பார்லிமெண்டில் மிக முக்கியமான விஷயத்தின் மீது சர்ச்சை நடந்த போது தேசத்தை ஆளும் பிரதமர் தூங்கி வழியும் காட்சி அனைவர் கண்ணிலும் பட்டது. இப்படிப்பட்ட தலைவரை உலகம் ஏளனம் செய்யும். மற்றொரு சம்பவம். இரவில் ஆபத்தில் சிக்கியப் இளைஞன் ஒருவன் உதவி வேண்டி உள்ளூர் தலைவருக்காக சூரியன் உதிக்கும் வரை காத்திருந்து போன் செய்தான். தலைவர் தூக்கம் விழிக்கவில்லை என்று பதில் வந்தது. மீண்டும் ஒன்பது மணிக்கு போன் செய்தான். தூங்குகிறார் என்று குடும்பத்தினர் பதிலளித்தனர். மீண்டும் பத்து மணிக்கு போன் செய்தாலும் அதே பதில்.
தூக்கம் தேவையே. ஆனாலும் தலைவன் உறக்கத்துக்கு அடிமையாகக் கூடாது. இரவு நேரம் கழித்து உண்டு நள்ளிரவு வரை விழித்திருக்காமல் நேரத்தோடு உண்டு படுத்துறங்கி உதயம் விரைவில் துயிலெழ வேண்டும்.
அரசியலில் முன்னேற விரும்புபவர் சூரியனை விட முன்பே எழுந்து தயாராகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எப்போதும் பொது மக்களோடு எளிதில் பழகுபவராக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் தேவை உள்ளவர், ஏழை, எளியவர் தன்னை வந்து சந்திக்கலாம் என்ற நம்பிக்கையைத் தலைவன் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். தொகுதியில் யாருக்கேனும் ஏதேனும் பிரச்னை என்றால் நானிருக்கிறேன் என்று ஆறுதல் கூறி ஓடிச் சென்று உதவுபவரே உண்மையான தலைவன்.
உலகம் விழிக்கும் முன்பே விழித்தெழுந்து, ‘சதா உன் சேவையில் இருப்பேன்! என்று எங்கள் தலைவர் இருப்பார்’ என்று பெயர் எடுக்க வேண்டும். காலைக் கடன்கள், இறைவழிபாடுகளை முடித்துக் கொண்டு பொது நல சேவைக்குத் தயாராக இருக்க வேண்டுமென்றால் இரவு நேரத்தோடு படுத்துறங்க வேண்டும்.
உறக்கத்துக்கு அடிமையாகக் கூடாதென்று ஸ்ரீராமன் பரதனிடம் கூறுகிறான்…
கச்சின்னித்ராவசம் நைஷி: கச்சித்காலே ப்ரபுத்யசே !
கச்சிச்சா பரராத்ரேஷு சிந்தமஸ்யர்த நைபுணம் !!
(ராமாயணம் அயோத்யா காண்டம் 100-17)
பொருள்: நீ நித்திரைக்கு வசமாகவில்லை அல்லவா? சரியான காலத்தில் துயிலெழுகிறாயல்லவா? செய்ய வேண்டிய பணிகள் குறித்து விடியற்காலையில் சிந்திக்கிறாய் அல்லவா?
விடியற்காலையே துயிலெழுபவர் பல வேலைகளைச் செய்ய முடியும். இயற்கைச் சூழல் அமைதியாக உள்ள நேரத்தில் எழுந்து அன்று செய்ய வேண்டிய வேலைகள், அவற்றில் முக்கியமானவை, முதலில் செய்ய வேண்டியவை… போன்றவற்றை ஒரு பட்டியல் எழுதி கொண்டால வேலை எளிதாகும்.
ஒன்றிணைந்த ஆந்திரப் பிரதேஷ் முதலமைச்சர், நடிகர் நந்தமூரி தாரக ராமாராவு திரைப்படத் துறையில் இருந்த போதிலிருந்தே பிரம்ம முகூர்த்தத்தை விட முன்பே எழுந்து விடுவார் என்பது அனைவரும் அறிந்ததே! அதே பழக்கம் அவர் முதல்வரான பின்பும் தொடர்ந்தது. அதிகாரிகள் வியப்படையும்படி அவர் விடியல் நான்கு மணிக்கே தயாராகி பணிபுரிய அமர்ந்து விடுவாராம். அரசாட்சி தொடர்பான கலந்துரையாடல், முடிவெடுப்பது எல்லாம் அந்த நேரத்தில் நடக்குமாம்.
அறிவுடைய தலைவன் உடலுக்கு ஓய்வு எத்தனை தேவையோ அந்த அளவே உறங்குவான். விவேகமற்றவன் உறக்கத்துக்கு வசமாவான். அப்படிபட்டவன் தலைவனாக நீண்ட காலம் நீடிக்க முடியாது. அதிக உறக்கம் சோம்பலை வளர்க்கும். சிந்திப்பதில் சுறுசுறுப்பைக் குறைக்கும். தொண்டர்கள் அப்படிப்பட்ட தலைவனை விட்டு நீங்குவர்.
சுபம்!