வந்தேறிகளின் வம்பு பிரச்சாரம்… விளைவுகள்… உண்மைகள்…! Part -14
Aryans invaded India and drove away Dravidians to the south!
ஆரிய திராவிடக் கொள்கை; ஆரியர்களின் படையெடுப்பு என்ற கட்டுக்கதை!
தெலுங்கில்: பிஎஸ் சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
உண்மையில் நாம் சுதந்திரம் பெற்றவர்களா? அல்லது அது வெறும் பிரமையா? ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் அது வெறும் பிரமையே என்பது புரியும்.
முகலாய முரடர்களான பாபர், அக்பர், அவுரங்கசிப் முதலான வேற்றுநாட்டு அரசர்கள் ஆக்கிரமித்ததால் நேர்ந்த அவமதிப்பின் கசப்பான ஞாபகங்கள் இன்னும் நம் கண்முன்னே நிற்கின்றன. அவை நம் நினைவுகளிலிருந்து நீங்கவில்லை.
அயோத்தி, மதுரா, காசி போன்ற பல கோவில்களை அவர்களுடைய கபந்தக் கரங்களிலிருந்து இன்னும் மீட்டு எடுத்தபாடில்லை. மெக்காலே ஏற்படுத்திய கல்வி முறையை மாற்றாமல் இருக்கிறோம். நம் நாட்டு தேசியக் கல்வி முறையை அளிப்பதற்கு முயற்சித்தால் “வீட்டோ” கூறும் வெளிநாட்டு ஆட்சியாளர்களின் அடிவருடிகளுக்கும் நம் நாட்டில் குறைவில்லை. ராமாயணம் மகாபாரதம் போன்ற நூல்களின் துணைகொண்டு புதிய தலைமுறையை உருவாக்க இயலாமல் இருக்கிறோம்.
நாட்டிலிருந்து வெள்ளையர்களை விரட்டுவதற்கு அப்போதைய தலைவர்களுக்கு இருந்த விடாமுயற்சியும் தேசபக்தியும் இந்த தலைமுறைக்கு இல்லையா? நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற மொழியும் கலாச்சாரமும் விலக்க முடியாதபடி நம்மீது சக்தி வாய்ந்த ஆதிக்கம் செலுத்துவது வருத்தமான விஷயம்.
வந்தேறிகளின் சுயநலத்துக்காக தொடங்கிய அப்போதைய கல்விக் கொள்கைகளையே இப்போது வரை நம் குழந்தைகளுக்கு பள்ளியிலும் கல்லூரிகளிலும் போதித்து வருவதால் கல்விக் கூடங்கள் நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு நிலையங்கள் ஆகி வருகின்றன.
வந்தேறிகள் பிரச்சாரம் செய்த பொய்களையே போலி மேதாவிகளும் தொடர்ந்து சொல்வதால் அவையே உண்மை என்று நம்பும் இளைய தலைமுறை உருவாகி வருகிறது. பஞ்ச தந்திரத்தில் வரும் பூசாரி, ஆட்டுகுட்டி கதை போல நான்கு முறை காதால் கேட்ட பொய் நம்மை பிரமையில் ஆழ்த்துகிறது.
அந்த பிரமைகள் என்னென்ன? எந்தெந்த பொய்களை நம் மூளையின் வேர்களில் நட்டார்கள்? அவை எவ்விதம் விஷ விருட்சங்களாகி நம் நாட்டு ஒற்றுமை, மக்களின் நேர்மை, முன்னேற்றம் ஆகியவற்றிற்கு முட்டுக்கட்டைகளாகியுள்ளன?
இந்து மதத்திற்குத் தீராத துரோகமிழைத்து மத மாற்றங்கள் செய்து ஆயிரக்கணக்கானவர்களை வதைத்து கொலை செய்தவர்கள் எல்லாம் தலைவர்களாக வலம் வருகிறார்கள். அவர்களின் பெயரில் சாலைகள், நகரங்கள், நினைவுச் சின்னங்களாக நிற்பது எந்த கலாசாரத்தைக் காட்டுகிறது? இந்த பின்னணியை ஆழமாக ஆராய்ந்தால் நமக்கு உண்மையிலேயே சுதந்திரம் கிடைத்துள்ளதா என்ற ஐயம் ஏற்படும்.
இந்த பொய்ப் பிரச்சாரங்கள், அவற்றினால் நாட்டு மக்களுக்கு நேர்ந்த தீவிர நஷ்டங்கள் மற்றும் உண்மைகளை ஆராய்ந்து பார்ப்பதே இந்த கட்டுரைத் தொடரின் முக்கிய உத்தேசம்.
எத்தனையெத்தனை பொய்ப் பிரச்சாரங்கள்…! ஒன்றா? இரண்டா? A முதல் Z வரை… ஆரியர்களின் படையெடுப்புக் கொள்கை, பிராமண வெறுப்பு, கோமாதா விவாதம், நம் கலாச்சாரம் மீது நிபந்தனைகள், கட்டுப்பாடுகள், அமிர்த மொழியான சமஸ்கிருதத்தின் மீது வெறுப்பு, ராமாயண மகாபாரத நூல்களை அவமதித்து விமர்சனம், பிரிட்டிஷார் மூலமாகவே நாம் நாகரீகம் அடைந்தோம் என்றும், நாம் பாம்பாட்டிகள் என்றும், பூஜை செய்யும் அநாகரீகர்கள் என்றும் ஏளனம் செய்வது, ஆட்சி அமைப்பும், நீதித்துறையும் மேற்கு நாட்டவர் இட்ட வரப்பிரசாதம் என்றும், நாம் விஞ்ஞானம் குறித்து எதுவும் அறியாத அஞ்ஞானிகள் என்றும், வெள்ளையர்கள் மூலமாகவே அறிவியல் செழிப்புற்றது என்றும் இவ்விதம் எத்தனை எத்தனையோ பொய்கள்… பிரச்சாரங்கள்…!
பிரித்தாளும் பிரிட்டிஷ் கொள்கைகளுக்கு நகல்களாக விளங்கும் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தம் சுயநலத்துக்காக இந்த கொள்கைகளை வளர்த்து போஷித்து வருகிறார்கள்.
நமக்கேயான நம் வரலாறு என்னவாயிற்று?
கிமு 4000 ல் படைப்பு தொடங்கியது என்று கூறும் பைபிள் வாக்கியத்தை உண்மை என்று நம்பிய மேல்நாட்டார் நம் நாட்டின் பண்டைக் காலத்தை அங்கீகரிக்க மறுத்தனர். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த மகான்களான ஹரிச்சந்திரன், ராமன், கிருஷ்ணன் போன்ற பலரை கவிஞர்களின் கற்பனை கதாபாத்திரங்களாக எடுத்தெறிந்து பிரச்சாரம் செய்தார்கள். ராமாயணம், மகாபாரதம் போன்ற நூல்களை Mythology என்று பெயரிட்டு ஒதுக்கினார்கள். மித்யை என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து Myth என்ற சொல் பிறந்தது. பொய் என்று இதற்குப் பொருள்.
நமக்கு வரலாற்று நூல்களே இல்லை என்று கூறிய மேற்கத்திய நாட்டின் கூற்றுக்களை மெக்காலேவின் மானஸ புதல்வர்களான போலி மேதாவிகள் நம்பினர். அதனால் நம் வரலாற்று ஆசிரியர்கள் கூட மேல்நாட்டார் எழுதிய நூல்களையே ஆதாரங்களாக ஏற்றுக்கொண்டனர். லட்சக்கணக்கான ஆண்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளும் சாமர்த்தியம் சில நூறாண்டுகள் வரலாறே கொண்ட மேல்நாட்டாரின் கற்பனைக்கு எட்டவில்லை.
“சாஸ்திர விஞ்ஞானம் வளரும் போது பாரதீயர்களின் சிறப்பு என்ன என்பது பிரபஞ்சத்திற்கு தெளிவாகப் புரியும்” என்றார் சுவாமி விவேகானந்தர். அவர் கூறியபடியே கார்பன் டேட்டிங், நாசா படங்கள், டிஎன்ஏ பரிசோதனைகள் போன்ற விஞ்ஞான பரிசோதனைகள், ராமசேது, கடலுக்கடியில் துவாரகா நகர் இடிபாடுகள், உலர்ந்து போன சரஸ்வதி நதித் தடயங்கள் போன்றவை நம் நாட்டின் புராதன வரலாற்று ஆதாரங்களாக நின்றுள்ளன.
உலகின் பல இடங்களிலிருந்து வெளிப்படும் புராதன விக்ரகங்கள், கோவில்கள் பாரத நாட்டின் பழமைக்கும் ஞானத்திற்கும் சாட்சிகளாக நின்று போலி வரலாற்றாசிரியர்களின் வாயை அடைத்து வருகின்றன. நல்ல உள்ளத்தோடு நம் நாட்டினை சுற்றிப் பார்ப்பதற்கு வந்த மேலைநாட்டு யாத்திரிகர்கள் எழுதிவைத்த அனுபவங்கள் மூலம் நம் வரலாற்றின் மகோன்னதம் தெளிவாகப் புரிகிறது. செல்வம், நாகரீகம், இலக்கியம் அனைத்திலும் சிறந்து விளங்கிய நம்மை ஆள்வதற்கு மேலை நாட்டோர் தீட்டிய சதியில் ஒரு பகுதியே ஆரிய திராவிடக் கொள்கை. அது அவர்களின் தாழ்வு மனப்பான்மையை மூடி மறைப்பதற்கு அவிழ்த்துவிட்ட கட்டுக் கதை.
ஆரியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து திராவிடர்களை தெற்கு நோக்கி விரட்டி விட்டார்கள் என்ற கொள்கை மொழி ஆய்வாளர்களின் மனதில் 19ம் நூற்றாண்டில் பிறந்தது. 1847 ல் ஆங்கில வரலாற்றாசிரியர் லாசென் முதல்முறையாக ஆரிய குலம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அதனை மாக்ஸ்முல்லர் 20 ஆண்டுகாலம் தீவிரமாக மிக அதிக அளவில் எடுத்தாண்டார். அந்தக் கற்பனையில் பிறந்த ஆரிய திராவிட கொள்கையால் அனேக அனர்த்தங்கள் நேர்ந்தன. ஆனால் அவர் தன் இறுதி ஆண்டுகளில் உண்மையை உணர்ந்தார். ஆரியர்களின் இருப்பிடம் ஆசியாவிலுள்ள பாரத நாடாக இருக்கலாம் என்றார். அதுவும் தவறே! அதனை ஆரிய நாகரிகம் என்றே கூற வேண்டும்.
நம் நாட்டினர் யாருமே பாரதத்திற்கு உரிமையானவர்கள் அல்ல என்றும் அனைவரும் வெளி நாட்டினரே என்றும் இந்தியா என்பது வெறும் சத்திரம் போன்ற ஒரு இடம் என்றும் பிரச்சாரம் ஜோராக நடந்தது.
இதன் மூலம் பிரிட்டிஷார் தம்மை நமக்குச் சமமானவர் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று முயற்சித்தனர். பாரத நாட்டின் மீது இருவருக்கும் சமமான உரிமை உள்ளது… ஆட்சி செய்வதற்கு உனக்கு எத்தனை அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரம் எனக்கும் உள்ளது என்ற வாதம் அவர்களுடையது. விடுதலைக்காக நடத்திய தேசிய போராட்டங்களை எடுபடவிடாமல் செய்வதே இந்தக் கொள்கையின் பின்னால் இருந்த சதி.
அகண்ட பாரதமெங்கும் வழிபாட்டுக்குரிய ராமன், கிருஷ்ணன் ஆகியோரை ஆரியர்களாக பிரச்சாரம் செய்து அவர்கள் மீது பக்தி குறையும்படி செய்வதற்கும் வெறுப்பு ஏற்படுத்துவதற்கும் ஒரு முயற்சி நடந்தது. இவ்வாறு பிறந்தவையே ஜஸ்டிஸ் கட்சி, திராவிட கழக கட்சிகள். இந்த கட்சிகளின் தலைவர்கள் ராமன், கிருஷ்ணன் போன்றோரை அவமதிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். அதிலும் முக்கியமாக ஒரே சொல், ஒரே வில், ஒரே இல் என்ற கொள்கை மூலம் தனி மனித ஒழுக்கத்தை போதித்த ஸ்ரீராமனை செருப்பு மாலையிட்டு அவமதித்த கீழான ஒழுங்கீனத்திற்கு அவர்கள் இறங்கியது வருத்தத்திற்குரியது.
அதேபோல் சமஸ்கிருத மொழியை ஆரிய மொழி என்று முத்திரை குத்தி, பழக்கத்தில் இருந்து நீக்கி விடும் முயற்சியை வெற்றிகரமாக தொடர்ந்தார்கள்.
உண்மையில் ‘ஆர்ய’ என்ற சொல் எவ்வாறு வந்தது?
பண்பாடு உள்ளவர்களை, கௌரவம் மிக்கவர்களை ஆர்ய என்ற சொல்லால் அழைப்பது வழக்கம். அதுவே மருவி ‘அய்யா’ என்றானது. அதனால் ஆரிய என்ற சொல் மரியாதை சொல்லே தவிர குலச் சொல் அல்ல! ஸ்ரீராமனை சீதையும், ராவணனை மண்டோதரியும் ‘ஆர்ய புத்ரா!’ என்று அழைத்ததாக ராமாயணம் தெரிவிக்கிறது. அபிக்ஞான சாகுந்தலத்தில் துஷ்யந்த மகாராஜாவை சகுந்தலா ஆர்ய புத்ரா என்று அழைத்ததாக காளிதாசர் பலமுறை கூறியுள்ளார்.
வட இந்தியர்கள் அனைவரும் ஆரியர்கள் என்றும் தென்னிந்தியர்கள் திராவிடர்கள் என்றும் பொய் பிரச்சாரத்தை செய்து வந்தார்கள்.
மனுவின் புத்திரன் த்ராமிளன் ஆண்ட சாம்ராஜ்யம் த்ராமிட தேசம் என்றும் அதுவே திராவிட என்று மருவியது என்றும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
திராவிட என்ற சொல் இவ்விதமாக நிலவியல் பெயரே தவிர குலத்தின் பெயர் அல்ல. அது இடப்பெயர். பாடப் புத்தகங்களில் ஆரியர்-திராவிடர் குறித்து விவரிக்கையில் ஆரியர்கள் ரஷ்யா, துருக்கி எல்லையில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர்கள் வெண்மையாக, உயரமாக இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு நீண்ட மூக்கு இருக்கும் என்றும் கண்கள் நீலமாக இருக்கும் என்று வர்ணித்தார்கள். ஆனால் ராமனும் கிருஷ்ணனும் நீலமேக சியாமளர்கள் அல்லவா? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
ஆரிய என்ற சொல் இடப் பெயர் என்று எடுத்துக்கொண்டால் ‘க்ருண் வந்தோ விஸ்வமார்யம்’ என்ற ருக் வேத மந்திரத்தின் பொருள் என்னவாவது? உலகில் கருப்பர்களை வெளுப்பர்களாகவும், சப்பை மூக்கு உள்ளவர்களை நீண்ட மூக்கு உள்ளவர்களாகவும் மாற்ற வேண்டும் என்பது அர்த்தமா என்று கேட்கிறார் ஆர்எஸ்எஸ் உயர் தலைவர் சுதர்சன்ஜி.
ஆர்ய என்ற பதம் (Qualitative) பண்புப்பெயர் என்பதற்கு இதைவிட வேறு அத்தாட்சி என்ன வேண்டும்? ‘க்ருண் வந்தோ விஸ்வமார்யம்’ – உலக மக்களை, நாகரீகமானவர்களை கௌரவிப்பது ஹிந்துக்களின் கடமை என்பதே இதன் பொருள். இதனை தலைகீழாக மாற்றிப் படித்து வெள்ளையர்கள் White man’s burden என்று பிரச்சாரம் செய்து கொண்டார்கள். உலகில் தாம் மட்டுமே நாகரீகமானவர்களாகவும் தம் நாகரீகத்தை உலக நாடுகளுக்கு பகிர்வதே வெள்ளையனின் கடமை என்றும் அறிவித்துக் கொண்டார்கள்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் நாட்டை நவீனமயமாக்க வேண்டும் என்று எண்ணிய சிலர், நீங்கள் எங்கள் நாட்டைவிட்டுப் போகாதீர்கள் என்று கெஞ்சினார்கள். இவ்வாறு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சுதந்திரப் போராட்டத்திற்குத் தீங்கிழைக்கும் பிரிவினரை உருவாக்கிக் கொண்டார்கள்.
ஆரிய திராவிடக் கொள்கை பொய்யென்று டிஎன்ஏ பரிசோதனை மூலம் நிரூபித்த செய்தியை மாணவர்களுக்கு போதிக்க வேண்டும். அனைத்தும் ஒன்றே… நாம் அனைவரும் ஒன்றே என்ற உண்மையை இளைய தலைமுறைக்கு எடுத்துக்கூற வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டு கலாச்சாரத்திக்கு வாரிசுகள் நாம் என்ற உண்மையை அவர்களுக்கு பெருமிதம் பொங்கும்படி கற்பிக்கவேண்டும். தாழ்வு மனப்பான்மையை நீக்க வேண்டும். கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்று வேற்றுமைகள் இன்றி இந்தியர்கள் அனைவரும் ஒரே இரத்தம், இந்தியர்கள் அனைவரும் ஒரே குலம் என்று தேசியவாதிகளான ரிஷிகள் கூறிய வார்த்தை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆகையால் பாடநூல்களில் இருந்து ஆரிய-திராவிட பாடங்களை நீக்கிவிட வேண்டும்.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவின் பகுதியாக இருந்த (இன்று பாகிஸ்தானில் உள்ள) சிந்து நதி தீரத்தில் உள்ள மொகஞ்சதாரோ ஹரப்பாவில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் மிகப் பழமையான நாகரிகத்தை கண்டறிந்தார்கள். அதற்கு சிந்துச் சமவெளி நாகரீகம் என்று பெயரிட்டார்கள். அதன்பின் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சுமார் 2,000 இடங்களில் நடத்திய ஆய்வில் கோவில்களும் சிலைகளும் தென்படவில்லை. இதனை ஆதாரமாகக் கொண்டு இடதுசாரிகளான சில வரலாற்றாசிரியர்கள் இந்த புதிய, நகைப்புக்கிடமான கொள்கையைக் கொண்டு வந்தார்கள். இந்து தத்துவம் மீது அவர்கள் தம் பகையை விளம்பரப்படுத்திக் கொண்டார்கள்.
ரோமிலாதாபர், பிபின் சந்திரா போன்றோரின் கூற்றுப்படி ஈராக், துருக்கி, ரஷ்யா ஆகிய இடங்களிலிருந்து வந்த ஆரிய குலத்தவர் அங்கிருந்த குதிரைகளை வசப்படுத்திக் கொண்டு நம் நாட்டிற்கு எடுத்து வந்தார்கள் என்றும் அவர்களோடு கூட சமஸ்கிருத மொழியையும் வேதங்களையும் எடுத்து வந்து இயற்கையை வழிபட்ட உள்ளூர் மக்களான திராவிடர்களை துரத்தி விட்டார்கள் என்றும் கதை கட்டினார்கள். அகழ்வாராய்ச்சியில் கிடைத்த யக்ஞ குண்டங்களை ஆரியர்கள் குளிர் காய்வதற்கு உருவாக்கிய அக்னி குண்டங்களாக வர்ணித்து யக்ஞங்களின் புனிதத்தை அவமதிக்கும் சதி செய்தார்கள். குளிர் காய்வதற்காக உருவாக்கியதென்றால் எண்கோண வடிவில் இருக்கும் பள்ளங்கள் தேவையா? ஏதோ ஒரு வடிவத்தில் ஆரிய திராவிடக் கொள்கையை வளர்த்து பெரிதாக்குவதற்கு பிரிட்டிஷார் பின்னிய பொய்யை இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் இவ்வாறு ஊதிப் பெரிதாக்கினார்கள்.
பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை அவர்களின் பாடப்புத்தகங்களில் எவ்வித பொய்களை போதித்து வருகிறார்கள் என்பதை பிரபல பத்திரிகையாளர் திரு அருண் செளரி ஆராய்ச்சி பூர்வமாக ஒரு கட்டுரையில் விவரித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் இருப்பிற்கு மூல ஆதாரமான இந்தியர்களை எதிரிகளாக எண்ணும் மனப்பான்மை சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பதை திரு செளரி அந்த கட்டுரையில் நிரூபித்துள்ளார்.
ஆனால் நம் நாட்டில் உண்மையைக்கூட மூடி மறைக்கும்படி நம் பாடப் புத்தகங்கள் உள்ளன. அரக்கர்கள் போல நடந்துகொண்ட கொடூரமான அக்பர் போன்ற அரசர்களை சிறந்தவர்களாகவும் கோயில்களை இடித்து தந்தையைக் கூட சிறையிலடைத்த ஔரங்கசீபை உதாரகுணம் உள்ளவனாகவும் கற்பிக்கிறோம்.
மதத்தை முன்னிட்டே பாரத நாடு துண்டாடப்பட்டது என்ற விஷயத்தைக்கூட இளைய தலைமுறைக்கு தெரியவிடாமல் எதற்காக கவனம் எடுத்துக் கொள்கிறார்களோ புரியவில்லை. இது அறியாமையா? கொடூரபுத்தியா? அல்லது போலி செக்யூலரிசமா?
(Source: ருஷிபீடம் தெலுங்கு ஆன்மீக மாத இதழ்)