திருப்பூரில் உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்து கடவுளை வழிபடக்கூடாது. கிறிஸ்தவ கடவுளை வழிபட வேண்டும் என கட்டாயப்படுத்தியதாக 2 ஆசிரியர்கள் மீது 6ம் வகுப்பு மாணவி தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பூரில் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அவிநாசியை சேர்ந்த ராக்கிய பாளையத்தை சேர்ந்த 12 வயது சிறுமி 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் தான் பள்ளியில் இரு ஆசிரியர்கள் மாணவியை கண்டித்துள்ளனர். நெற்றியில் திருநீர், கழுத்தில் ருத்ராட்சம் ஆகியவற்றை குறிப்பிட்டு மாணவியை ஆசிரியைகள் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கிறிஸ்தவ கடவுளை வழிபடும்படி கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. அத்துடன் இந்து கடவுள்களின் பெயரை எழுதக்கூடாது என ஒரு ஆசிரியர் கூறியுள்ளதாக தெரிகிறது.
இதனால் சிறுமி மனம் உடைந்தார். மேலும் பள்ளிக்கு செல்லமாட்டேன் மாணவி தனது தந்தையிடம் கூறினார். அவர் காரணம் கேட்கவே நடந்த சம்பவத்தை மாணவி தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து மாணவியின் தந்தை நேற்று வடக்கு போலீஸ் நிலையத்தில் ஆசிரியைகள் மீது புகார் அளித்தார்.
அந்த புகாரில், ”என்மகள் நெற்றியில் திருநீறு, கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து பள்ளி செல்கிறார்.
தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியைகள் என இருவர் அதை குறிப்பிட்டு திட்டியுள்ளனர். மேலும் கிறிஸ்தவ கடவுளை வணங்கும்படி வலியுறுத்தி, இந்து கடவுள் பெயரை எழுதக்கூடாது என கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இதனால் மகள் பள்ளி செல்ல மறுக்கிறார். என் மத உணர்வை புண்புடுத்தியது மட்டுமின்றி மகளை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர்.
இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரில் ஆசிரியைகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த புகாரை தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் உத்தரவிட்டார்.
அதன்படி மாவட்ட கல்வி அலுவலர் நரேந்திரன் இன்று விசாரைணை நடத்தி வருகின்றார். மாணவி, மாணவியின் பெற்றோர், ஆசிரியர்களிடம் தனித்தனியே விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த இந்து முன்னணியினர் பள்ளி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியை கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் ஆசிரியைகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.