உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது ஞானவாபி மசூதி.
இந்த மசூதியின் பாகங்கள் இந்து கோவில் முறைப்படி அமைந்துள்ளது. மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கௌரி அம்மன் சிலையை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, ஞானவாபி மசூதி வளாகத்தில் மூன்றாவது நாளான நேற்று வீடியோ ஆய்வுப் பணி தொடர்ந்து நடைபெற்றது. நேற்றுமுன்தினம் வரை சுமார் 65 சதவீத ஆய்வு நிறைவடைந்த நிலையில் நேற்று கடைசி கட்ட வீடியோ பதிவு தொடங்கியது.
ஆய்வுப்பணி முடிவடைந்த பின் பேசிய ஆய்வு குழு துணை கமிஷனர் ஒருவர் கூறுகையில், மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு பணிகள் தடையின்றி நடத்தப்பட்டது. கூடிய விரைவில் எங்கள் ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.
ஆய்வு பணி நிறைவடைந்த நிலையில், மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியருக்கு வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானவாபி வளாகத்தின் மேற்குச் சுவரில், இந்துக் கோயில் இடிப்பின் எச்சங்கள் காணப்படுவதுடன், மிகப்பெரிய சான்றாக இருக்கும் படங்கள் ஆய்வு செய்யப்படும். இதற்காக சனிக்கிழமை கணக்கெடுப்பின்போது முதல் மூன்று அறைகள் திறக்கப்பட்ட நிலையில், நான்காவது பூட்டு நேற்று திறக்கப்பட்டது.
வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின், ஆஜ் தக்/ கிணற்றுக்குள் ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதன் பாதுகாப்புக் கோரி சிவில் நீதிமன்றத்திற்குச் செல்வதாக அவர் கூறினார்.
சிவலிங்கம் 12 அடி 8 அங்குல விட்டம் கொண்டது. இந்து தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் மதன் மோகன் யாதவ், சிவலிங்கம் நந்தியை கொண்டது என்று கூறினார்.
அந்த பகுதிக்குள் யாரும் நுழைய தடை விதித்த நிலையில் அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு செய்ய தடை விதிக்க கோரிய வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.