இந்தியா மே.இ. தீவுகள் முதல் டி20 போட்டி
- K.V. பாலசுப்பிரமணியம்
இந்திய அணி (190/6, ரோஹித் ஷர்மா 64, தினேஷ் கார்த்திக் 41, அல்சாரி ஜோசப் 2/46) மேற்கு இந்தியத் தீவுகள் அணியை (இருபது ஓவரில் 122/8, ப்ரூக்ஸ் 20, அர்ஷதீப் சிங், அஷ்வின், பிஷ்னோய் தலா 2 விக்கட்) 68 ரன் கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இந்திய அணியில் மூன்று ஸ்பின்னர்கள் இடம் பெற்றனர்.
ஹார்திக் பாண்ட்யா நன்றாக பேட் செய்வதோடு வேகப் பந்துவீச்சாளராகவும் செயல்படுவதாலும், ஜதேஜா ஸ்பின்னராகவும் அதிரடி மட்டையாளராகவும் இருப்பதால் இந்தியாவால் மூன்று சுழல் பந்து வீச்சாளர்களைத் தேர்வுசெய்ய முடிந்தது.
இந்திய பேட்டர்களில் ஷ்ரேயாஸ் ஐயர் (ரன் எதுவும் எடுக்கவில்லை), பாண்ட்யாவும் (1 ரன்) சரியாக விளையாடவில்லை. பிறர் சிறப்பாக ஆடினர். குறிப்பாக ரோஹித் ஷர்மா, 44 பந்துகளில் 64 ரன் எடுத்து 15ஆவது ஓவர் வரை ஆடினார்.
அதன் பின்னர் அடுத்த ஐந்து ஓவர்களில் 68 ரன் எடுத்த பெருமை தினேஷ் கார்த்திக்கையும் (41 ரன்) அஷ்வினையும் (13) சேரும். 20 ஓவர் முடிவில் இந்தியா ஆறு விக்கட் இழப்பிற்கு 190 ரன் எடுத்தது. பின்னர் ஆடவந்த மே.இ. தீவுகள் அணி இந்திய சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் வீழ்ந்தது.
அஷ்வின், பிஷ்னோய் தலா 2 விக்கட், ஜதேஜா ஒரு விக்கட் என ஐந்து விக்கட்டுகளை 12 ஓவர் வீசி 74 ரன்கள் கொடுத்து இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினர்.
மே.இ தீவுகள் அணியில் 20 ரன்களை எவரும் தாண்டவில்லை. கீமோ பால் தவிர எவரும் 20 பந்துகள் கூட தாக்குப்பிடிக்கவில்லை. முதல் எட்டு ஓவர் வரைக்கும் இந்திய அணியின் ரன் ரேட்டை ஒட்டி இருந்த மே.இ தீவுகள் அணியின் ரன் ரேட் அதன் பின்னர் அதல பாதாளத்தில் வீழ்ந்தது.
கடைசி ஐந்து ஓவர்களில் அவர்களுக்கு 93 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அவர்களால் 24 ரன் கள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே அந்த அணி தோல்வியடைந்தது.
தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். ஐந்து ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.