இந்தியா வங்கதேசம் முதல் டெஸ்ட்- ஐந்தாம் நாள் – 18.12.2022
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
வங்கதேச அணியை முதல் டெஸ்ட் போட்டியில் 185 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது. இந்தியா வங்கதேச அணிகள் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி சிட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 404 ரன்கள் அடித்தது. வங்கதேசம் அணி தனது 150 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதால் இந்திய அணி 254 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆனால் ஃபாலோ ஆன் செய்யாமல் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணிக்கு ‘ஷுப்மன் கில்’ மற்றும் ‘சேத்தேஷ்வர் புஜாரா’ இருவரும் சதம் அடித்தனர். இதனால் மேலும் வலுவான நிலை பெற்ற இந்திய அணி 258/2 என இருக்கும்போது புஜாரா சதம் அடித்தவுடன் டிக்ளர் செய்தது. இதனால் இந்திய அணி 512 ரன்கள் முன்னிலையில் இருந்தது. 513 ரன்கள் அடித்தால் என்று வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணிக்கு துவக்க வீரர்கள் சாண்டோ (67 ரன்), சாகிர் உசேன் (100 ரன்) நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர்.
அதன்பிறகு வந்த வீரர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். மிடில் ஆர்டரில் கேப்டன் சாகிப் அல் ஹசன் 84 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இறுதிவரை நடந்த அவரது போராட்டமும் எடுபடவில்லை. அக்ஸர் பட்டேல் மற்றும் குல்தீப் இருவரும் சுழலில் அசத்தி முறையே நான்கு மற்றும் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். வங்கதேசம் அணி 324 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதன் மூலம் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி மீண்டும் செல்லுமா?
இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 55.7% வெற்றிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது இந்திய அணி. ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் தொடர்ந்து முதல் இரண்டு இடங்களில் நீடித்து வருகின்றன. இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியை வங்கதேச அணியுடன் விளையாட உள்ளது.
அதிலும் வெற்றி பெற்று, பின்னர் நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேறி இந்திய அணியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.