கேப்டவுன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா நன்கு விளையாடி ரன் சேர்க்க இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.
தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி நேற்று கேப்டவுனில் நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டுமினி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் விராட் கோலி ஓய்வில் இருக்க, ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
பேட் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் (11) அதிர்ச்சி தந்தார். தவான், ரெய்னா இணைந்து சிறப்பாக விளையாடினர். ரெய்னா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். மணிஷ் பாண்டே (13), ஷிகர் தவான் (47), தோனி (12), பாண்ட்யா (21), தினேஷ் கார்த்திக் (13) ஆகியோர் ஆட்டமிழந்தனர். முடிவில், இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியில், ஹென்ரிக்ஸ் 7 ரன், மில்லர் 24 ரன், கிளாசன் (7), கேப்டன் டுமினி (55), ஜோன்கர் (49) ஆட்டமிழந்தனர். முடிவில், தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இதன் மூலம் தென் ஆப்ரிக்க மண்ணில் ஒரு நாள் தொடரை (5-1) , டி20 தொடரை (2-1) இந்திய அணி கைப்பற்றியது.