கோவையில் அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பில், இன்று வழக்கம்போல் ஊடகத்தினருடன் மல்லுக்கட்டும் விதத்தில் கார சார விவாதம் நடந்தது. பெட்ரோல் டீசல் விலை, தேர்தலை முன்னிட்டு ரூ.2 குறைக்கப்பட்டதா என செய்தியாளர் ஒருவர் கேட்க, அதை அடுத்து அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அண்ணாமலை.
முன்னதாக, கோவையில் இந்தியன் தொழில் முனைவோர் கூட்டத்தில் ‘கோயம்புத்தூரின் தேவைகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசினார். அப்போது, அடுத்த 25 ஆண்டுகளை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார். நான் வேட்பாளர்களை எதிர்த்து நிற்கவில்லை; மாற்றத்திற்காக தேர்தலில் நிற்கிறேன். நான் வெற்றி பெற்று கோவை தொகுதி எம்.பி.,யாக மட்டும் நாடாளுமன்றத்துக்கு செல்லப் போவதில்லை. ஒட்டுமொத்த தமிழகத்துக்குமான தேவைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்று குறிப்பிட்டார்.
இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது என்ற தேர்தல் ஆணையம் விதிமுறை வகுத்த நிலையில், நேற்று இரவு 10.30க்கு மேல் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக்கேட்ட திமுக.,வினருக்கும், பாஜக.,வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் திமுக.,வினர் 7 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் தேர்தல் விதிமீறி பிரசாரம் மேற்கொண்டதாக அண்ணாமலை மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து கோவை பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இரவு 10 மணிக்கு மேல் மைக் பயன்படுத்தாமல் மக்களை சந்திக்கலாம். 10 மணிக்கு மேல் மக்களை வேட்பாளர்கள் சந்திக்கக்கூடாது என எங்கும் சொல்லவில்லை. மக்களின் அன்பினால் தாமதம் ஆவது, தேர்தல் பிரசாரத்தில் சகஜம் தான்.
பாஜகவினரை திமுகவினர் தள்ளிவிட்டதால் தான் கைகலப்பு ஏற்பட்டது. காவல்துறை அனுமதியோடு தான் கூட்டம் நடைபெற்றது. சில காரணங்களால் தாமதமானது. பாரதிய ஜனதா பிரசாரத்திற்கு ஆர்வமாக வந்து மக்கள் காத்திருக்கிறார்கள்.
அரசியல் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மோடி 3வது முறையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் நான் மைக்கில் பேசிய வீடியோ இருந்தால் வெளியிடுங்கள். தேர்தல் விதிகளை நான் நன்கு அறிவேன். தேர்தல் விதிகளை மீறவில்லை என்றார் அண்ணாமலை.
பின்னர், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், கோவையில் நேற்றிரவு 10 மணிக்கு மேல் விதிமீறி பிரசாரம் செய்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, ”இரவு 10 மணிக்கு மேல் மக்களை சந்திக்க வேட்பாளர்களுக்கு உரிமை உள்ளது. 10 மணிக்கு மேல் மைக்கில் தான் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணைய விதி கூறுகிறது. நான் மைக்கை வைத்து பிரசாரம் செய்யும் வீடியோ இருந்தால் காட்டுங்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலையிடம் வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்கள் மாறி மாறி கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை, ”திமுக சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் என்னாச்சு என ஸ்டாலின், உதயநிதியிடம் போய் கேட்டீர்களா? அண்ணாமலைக்கு ஒரு மாதிரியும், ஆளும் கட்சிக்கு ஒரு மாதிரியும் பத்திரிகையாளர்கள் நடந்து கொள்கிறீர்கள். அறத்துடன் நடந்து கொள்ளுங்கள்” என்றார்.
பெட்ரோல் விலை குறித்த கேள்வி எழுந்தபோது அண்ணாமலை இந்தக் கேள்வியை ஸ்டாலினிடம் எழுப்புங்கள். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்புங்கள் என்றார். இதனையடுத்து பத்திரிகையாளர்கள் அண்ணாமலையுடன் வழக்கம்போல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.