கொழும்பு:
இலங்கையில் நடைபெறும் நிதாஹாஸ் டி-20 முத்தரப்பு தொடரின் 4-வது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரில் இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஆட்டம் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மழை காரணமாக போட்டி 19 ஓவராக குறைக்கப்பட்டது.
இதை அடுத்து, டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக குணதிலகா, குசால் மெண்டிஸ் களம் இறங்கினார்கள். முதல் இரண்டு ஓவரில் 24 ரன்கள் அடித்தது இலங்கை. 3-வது ஓவரை சர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே குணதிலகா ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த குசால் பெரேராவை வாஷிங்டன் சுந்தர் 3 ரன்னில் வெளியேற்றினார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய குசால் மெண்டிஸ் 38 பந்தில் 3 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 55 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இந்தியா சிறப்பாக பந்து வீச இலங்கை அணி 19 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.
இந்தியா தரப்பில் சர்துல் தாகுர் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், உனத்கட், சஹால், விஜய்சங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதை அடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் அதிர்ச்சி அளித்தனர். ரோகித் சர்மா 11 ரன்னிலும் ஷிகர் தவான் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அப்போது அணியின் ரன் 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் என இருந்தது.
அடுத்து இறங்கிய ராகுல் – சுரேஷ் ரெய்னா ஜோடி ஓரளவு அதிரடியாக ஆடியது. ரெய்னா 15 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து மணீஷ் பாண்டே ராகுல் இருவரும் நிதானமாக ஆடினர். ஆனால் ஹிட் விக்கெட் முறையில் ராகுல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் பொறுப்பாக ஆடினார். இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. இந்த ஜோடி இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தந்தது. இந்திய அணி 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மணீஷ் பாண்டே 31 பந்துகளில் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 42 ரன்களும், தினேஷ் கார்த்திக் 25 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை சர்துல் தாகுர் வென்றார். இன்றைய போட்டியில் வங்கதேசத்தை இந்திய அணி எதிர்கொள்கிறது.