சென்னை சாலைகளில் பள்ளி செல்லும் சிறுவர்கள் வேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி வருவதால் பல விபத்துக்கள் நடப்பதாக அடிக்கடி போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்த விபத்தால் சாலையில் நடந்து செல்லும் அப்பாவிகள் பலர் பாதிக்கப்படுவதால் சென்னை காவல்துறை தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 4 இன் படி 18 வயதுக்கு குறைவான ஒருவர் லைசென்ஸ் இல்லாமல் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக் கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறி சிறார்களுக்கு வாகனத்தை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்கள் மீது கைது நடவடிக்கை உள்பட சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனால் இனிவரும் நாட்களில் சிறுவர்கள் வாகனங்கள் இயக்குவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதேப்போன்ற ஒரு அறிவிப்பை சமீபத்தில் தெலுங்கானா மாநில போலீசார் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.