
மதுரை ஆதீன மடத்துக்கும், மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கும் தான் செல்வதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திடீரென திரும்பப் பெற்றுக் கொள்ள கோரிக்கை விடுத்ததை அடுத்து, உச்ச நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஜெகதலப் பிரதாபன் என்பவர் ஒரு வழக்கைத் தொடுத்தார். அதில், மதுரை ஆதீன மடத்துக்கு உள்ளும், ஆதீனத்துக்குச் சொந்தமான மற்றும் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு உள்ளும் நித்தியானந்தா நுழைவதற்குத் தடை கோரினார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, நித்யானந்தாவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், நித்யானந்தா சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராமன், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நித்தியானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவைத் திரும்ப பெற தங்களை அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார். இதை அடுத்து மனுவைத் திரும்பப் பெற நீதிபதிகள் அனுமதி அளித்தனர். மேலும், இந்த மேல் முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தனர்.



