
மதுரை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 36,000 கோயில்களில் உள்ள வணிக நோக்கிலான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சம்பந்தப்பட்ட கோயில் அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பழனி மலை அடிவாரத்தில் பழனி தண்டாயுதபாணி தேவஸ்தான திருக்கோவிலுக்குச் சொந்தமான மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள கடைகளைக் காலி செய்யுமாறு, கோவில் இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அந்த இடத்தில் கடை வைத்திருந்த 7 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை எடுத்துக் கொண்ட நீதிபதி சுப்பிரமணியம், அவற்றைத் தள்ளுபடி செய்தார். மேலும், கோயில் வளாகத்தில் தொடர்ந்து கடைகளை நடத்த வேண்டும் என்று கேட்க எந்த சட்ட உரிமையும் இல்லை என்று கூறினார்.
மேலும் தமிழகத்தில் உள்ள அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 36 ஆயிரம் கோவில்கள் அனைத்தையும் பராமரிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கூறிய நீதிபதி, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் வளாகங்களில் உள்ள வணிக நோக்கிலான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கும், அறநிலையத் துறைச் செயலர், அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.



