ஜம்மு- காஷ்மீரில் கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவ நெருக்கடி காரணமாக துணை முதல்வர் பதவியை நிர்மல் சிங் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய துணை முதல்வராக கவிந்தர் குப்தாவை பா.ஜ.க அறிவித்துள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி, பா.ஜ.க., கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில், காஷ்மீர் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய அளவில் நாடு முழுதும் பரப்பப் பட்டது. இந்தச் சம்பவத்துக்காக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பெரும் போராட்டங்களை நடத்தி வந்தன.
இதனிடையே, இந்தச் சம்பவம் ஜோடிக்கப்பட்டது என்றும், அரசியல் ரீதியாக வேண்டுமென்றே கிளப்பட்டுள்ளது என்றும் கூறி, குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவு தெரிவித்து காஷ்மீரில் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் சவுத்ரி லகால் சிங், வர்த்தகத்துறை அமைச்சர் சந்தர் பிரகாஷ் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் ஜம்மு- காஷ்மீர் அமைச்சரவை 30ஆம் தேதி மாற்றி அமைக்கப்படவுள்ளது என துணை முதல்வர் நிர்மல் சிங் கூறியிருந்தார். நேற்று திடீரென, துணை முதல்வராக இருந்த நிர்மல் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய துணை முதல்வராக பா.ஜ.கவைச் சேர்ந்த கவிந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஜம்மு- காஷ்மீர் சட்டமன்ற அவைத்தலைவராக இருந்தவர்.