ராமேஸ்வரம் தீவை ராமநாதபுரத்துடன் இணைக்கும் பாம்பன் பாலத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பாலத்தில் குண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்ததை அடுத்து அங்கே நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த போன் காலில், பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், 12 மணியளவில் குண்டு வெடித்து பாலம் தரை மட்டமாகும் எனவும் தெரிவித்து மர்ம நபர் ஒருவன் இணைப்பைத் துண்டித்துள்ளார். இதையடுத்து பாம்பன் பாலத்தில், வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர்.
பாலத்தின் அருகிலுள்ள பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, தொடர்பு கொள்ளப்பட்ட தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.