தில்லியும் புதுவையும் ஒன்றல்ல என உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, இன்று தனது ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இதுதொடர்பாக விவாதம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, இல்லாத அதிகாரத்தை இருக்கும் எனக் கூறுபவர்களை உச்ச நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை அவர் மறைமுகமாக சாடினார். தீர்ப்பை மீறி செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றார் அவர்.
மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு ஆளுநர் கிரண் பேடி அதிகாரிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாராயனசாமி கூறினார்.
ஆனால், நாராயண சாமிக்கு பதிலளிக்கும் விதத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, மற்ற யூனியன் பிரதேசங்களுக்குப் பொருந்தும் என்றாலும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் தில்லி யூனியன் பிரதேசங்கள் ஆகியவை வெவ்வேறானவை என்று கூறி, சட்டப் பிரிவு 239 ஏ புதுச்சேரி யூ.பி.க்கு கொடுத்துள்ள அந்தஸ்து குறித்தும் கூறியுள்ளார்.
இதனை தனது டிவிட்டர் பதிவில் விளக்கியிருந்தார் கிரண் பேடி. அவரது டிவிட்டர் பதிவில்…
These are the words of Honble Supreme Court in Govt of NCT of Delhi vs Union of India and Another.
Honorable Court has made a clear distinction between the two.
Delhi as a UT and Puducherry as a UT pic.twitter.com/c1lDfV11J0— Kiran Bedi (@thekiranbedi) July 5, 2018
என்று கூறியுள்ளார். இதை அடுத்து, இன்று சோனாம்பாளையம் பகுதியில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் கிரண் பேடி.
இருப்பினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியது தவறு என்றும், அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என சோலி சொராப்ஜி கூறியுள்ளார் என்றும் நாராயணசாமி அதே பல்லவியைப் பாடி வருகிறார்.