சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 14,600 கன அடியாக சரிந்த நிலையில், அணையின் நீர்மட்டம் 10 நாட்களுக்குப் பின்னர் தற்போது 120 அடிக்குக் கீழ் குறைந்துள்ளது.
கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து விநாடிக்கு 5,160 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது. இருப்பினும், அருவிகளில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் 25-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப் படி, 14,660 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 119.98 அடியாகக் குறைந்துள்ளது. அணையில் 93.43 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து இன்று காலை முதல் விநாடிக்கு 18,400 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.