சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். இதனால் ரேஷன் கடை மூடப்படும் நிலை உருவாகி உள்ளது.
ஊழியர்களின் கோரிக்கை குறித்து முதலமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரேஷன் கடை ஊழியர்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.கடந்த பிப்ரவரி 24-ந் தேதி கூடிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டத்தின் தீர்மானத்தின் படி, மார்ச் 9-ந் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்வது என்றும், அதற்கு முன்னதாக மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த தயாரிப்பு மண்டல மாநாடுகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 24-ந் தேதி வரை 10 மண்டல மாநாடுகள் நடைபெற்றது. விருகம்பாக்கம் மாநாட்டில், இன்று வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், ரேஷன் கடை ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளாக உள்ள சம வேலைக்கு சம ஊதியம், ஒரே துறை, எடை குறைவு இல்லாமல் பொருட்கள் வழங்குதல், சேதாரக் கழிவு அனுமதித்தல், பணி வரன்முறை, மானியத் தொகை விடுவித்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர்கள் அனைவரும் 6-ந் தேதி(நாளை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். எனவே அன்று ரேஷன் கடைகள் திறக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாளை ரேஷன் கடை மூடி போராட்டத்தல் ஈடுபட போவதாக ஊழியர்கள் அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு சிரமம் இன்றி ரேசன் பொருட்கள் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் பேசி விரைவில் முடிவுகளை அறிவிப்போம் என்றார்.