சென்னை: நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப் படவுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, இதுவரை இல்லாத அளவில் கெடுபிடிகள் கொடுத்து, இந்து அமைப்புகள் இதுவரையில் கொண்டாடி வந்த விநாயகர் சதுர்த்தி விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த வாழ்த்து:
ஞான முதல்வனாகிய விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தம் திருவுருவாய்க் கொண்ட விநாயகப் பெருமானின் திரு அவதார தினமான இந்நன்னாளில் களிமண்ணால் செய்யப் பட்ட விநாயகர் சிலையை வைத்து, அருகம் புல், எருக்கம் பூ, செம்பரத்திப் பூ, வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு பூஜை செய்து, விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படையலிட்டு, மக்கள் விநாயகர் சதுர்த்தி திருநாளை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுந்த வரும்
– என்பதற்கேற்ப, விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் பழனிசாமி.
இந்நிலையில், விநாயக சதுர்த்தி கொண்டாட 30 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 6 நிபந்தனைகள் விநாயகர் சதுர்த்தி சிலைகள் வைத்துக் கொண்டாடும் விழா அமைப்பாளர்களுக்கு விதிக்கப் பட்டுள்ளன.
1. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சான்றிதழ்
2. விநாயகர் வைக்கபடும் இடத்திற்கான ஆட்சேபனை இல்லா கடிதம்
3. மின் வாரிய அதிகாரி ஆய்வுக் கடிதம்
4. தீயணைப்பு அதிகாரி தடையில்லாச் சான்று
5. புதிதாக ஒரு இடத்தில் கூட வைக்க அனுமதி கிடையாது
6. கண்டிப்பாக சர்ச், மசூதி வழி செல்ல அனுமதி கிடையாது
– இப்படி எல்லாம் நடைமுறை சாத்தியமற்ற வகையில் நெருக்கடி கொடுத்து, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்தையும் தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று குற்றம் சாட்டுகின்றார்கள் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.